Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test Series 2025: பட்டோடி முதல் கோலி வரை.. இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்ட்!

Shubman Gill Captaincy: சுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, கில் முதன்முறையாக டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கிறார். இங்கிலாந்து மண்ணில் இந்திய கேப்டன்கள் சதம் அடிப்பது அரிது; கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு கேப்டன் சதம் அடித்தார். கில் இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மன்சூர் அலி கான் பட்டோடி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்தில் கேப்டனாக சதம் அடித்துள்ளனர்.

India vs England Test Series 2025: பட்டோடி முதல் கோலி வரை.. இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்ட்!
பட்டோடி - அசாருதீன் - கங்குலி - விராட் கோலிImage Source: PTI and Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 18:26 PM

சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நாளை அதாவது 2025 ஜூன் 20ம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகள் (India vs England Test Series 2025) கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வுக்குபிறகு, சுப்மன் கில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழிநடத்த இருக்கிறார். இதுவரை பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த சுப்மன் கில் தனது கேப்டன்சி மூலம் சிறப்பான இடத்தைப் பிடிக்க முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் சதம் அடித்தால் சிறப்பான சாதனை பட்டியலில் ஒன்றிலும் இடம் பிடிப்பார்.

அதாவது, இதுவரை நான்கு இந்திய கேப்டன்கள் மட்டுமே இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளனர். கடைசியாக ஒரு இந்திய கேப்டன் இங்கிலாந்தில் சதம் அடித்தது 7 ஆண்டுகளுக்கு முன் என்றால் யாராவது நம்புவார்களா..? கேப்டனாக சத வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 வயதான கில்லுக்கு இப்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியல்:

மன்சூர் அலி கான் பட்டோடி

இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெயரை பெற்றவர் மன்சூர் அலி கான் பட்டோடி ஆவார். கடந்த 2024ம் ஆண்டு வரை இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் பட்டோடி டிராபி என்றே அழைக்கப்பட்டது. 1967ம் ஆண்டு லீட்ஸில் மன்சூர் அலி கான் பட்டோடி இங்கிலாந்துக்கு எதிராக 148 ரன்கள் எடுத்தார்.

முகமது அசாருதீன்

மன்சூர் அலி கான் பட்டோடிக்குப் பிறகு, 23 ஆண்டுகளாக எந்தவொரு இந்திய கேப்டனும் இங்கிலாந்தில் சதம் அடிக்க முடியவில்லை. இந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன். அசாருதீன் கடந்த 1990ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டு சதங்களை அடித்தார். அதன்படி, லார்ட்ஸில் 121 ரன்களும், மான்செஸ்டரில் 179 ரன்களும் எடுத்தார்.

சவுரவ் கங்குலி

இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த 2002ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் அதாவது லீட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சவுரவ் கங்குலி 128 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி

இங்கிலாந்து மண்ணில் கேப்டனாக இரண்டு சதங்கள் அடித்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பர்மிங்காமில் 149 ரன்களும், நாட்டிங்ஹாமில் 103 ரன்களும் எடுத்தார். 2025 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2025 மே மாதம் ஓய்வை அறிவித்தார்.