IND vs ENG Test Series 2025: விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன துணை கேப்டன் ரிஷப் பண்ட்!
Shubman Gill Batting Position: 2025 ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்கிறார். ரிஷப் பண்ட் செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலிக்கு பின் 4வது இடத்தில் கில், 5வது இடத்தில் அவர் பேட்டிங் செய்வார் என்று தெரிவித்தார். இந்திய அணியின் புதிய பேட்டிங் வரிசை மற்றும் போட்டி ஒளிபரப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Test Series 2025) முதல் டெஸ்ட் போட்டி நாளை அதாவது 2025 ஜூன் 20ம் தேதி முதல் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி அடுத்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக நேற்று அதாவது 2025 ஜூன் 18ம் தேதி துணை கேப்டன் ரிஷப் பண்ட் (Rishabh Pant) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விராட் கோலிக்கு பதிலாக 4வது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்றும், பண்ட் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய போகிறார் என்பதையும் தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 210 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள விராட் கோலி, 160 இன்னிங்ஸ்களில் 4வது இடத்தில் பேட்டிங் செய்தார். இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றபிறகு, இந்த வரிசையில் யார் பேட்டிங் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதிலை துணை கேப்டன் ரிஷப் பண்ட் வெளிப்படுத்தினார்.




4வது இடத்தில் யார் களம்..?
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட், “டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் பேட்டிங் செய்த விராட் கோலிக்கு ஓய்வுக்கு பிறகு, கேப்டன் சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். அதேநேரத்தில், நான் 5வது இடத்தில் களமிறங்குவேன்” என்று தெரிவித்தார்.
சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 29 முறை தொடக்க வீரராகவும், 30 முறை 3வது இடத்தில் களமிறங்கியுள்ளார். தொடக்க வீரராக கில் இதுவரை 2 சதஙக்ள் மற்றும் 4 அரைசதங்களுடன் 874 ரன்கள் எடுத்துள்ளார். 3வது இடத்தில் பேட்டிங் செய்துள்ள கில் இதுவரை 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,019 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், ஒருமுறை கூட 4வது இடத்தில் பேட்டிங் செய்தது இல்லை. அதன்படி, சுப்மன் கில் முதல் முறையாக நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளார்.
5வது இடத்தில் களம் இறங்கும் பண்ட்:
On how is he looking at the #TeamIndia Test vice-captaincy role 🤔
Hear what Rishabh Pant had to say #ENGvIND | @RishabhPant17 pic.twitter.com/59X01ARpxm
— BCCI (@BCCI) June 18, 2025
சுப்மன் கில்லுக்கு பிறகு ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக 5வது இடத்தில் பேட்டிங் செய்யவுள்ளார். ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 26வது முறை 5வது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார். 5வது இடத்தில் பேட்டிங் செய்து இதுவரை 2 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் உதவியுட 1,301 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியை எங்கு காணலாம்..?
இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. மொபைல் மற்றும் ஓடிடி தளங்களில் காண விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம். 2025 ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, 3.30 மணிக்கு போட்டி தொடங்கும்.