IPL 2026 : பெங்களூருவில் போட்டிகளை நடத்த அரசு அனுமதி – ரசிகர்கள் உற்சாகம்
Karnataka Government Approves RCB IPL 2026: ஐபிஎல் 2026 போட்டிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடத்திக்கொள்ள கர்நாடகா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 போட்டிகளை பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடத்திக்கொள்ள கர்நாடகா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. கர்நாடகா அரசு அனுமதி வழங்குவதற்கு முன், சின்னசாமி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. கடந்த மார்ச் 13, 2026 அன்று நடைபெற்ற ஆய்வில், மைதானத்தில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் நிபுணர் குழுவை திருப்திப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் 2026ன் போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி
இதுகுறித்து பேசிய கர்நாடகா மாநில கிரிக்கெட் அசோசியேஷன் செய்தித் தொடர்பாளர் வினய் மித்ருஞ்செய், சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சார்பில் கேட்கப்பட்ட 5 போட்டிகளும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். மேலும் பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்றார். அதே நேரம் போட்டிகள் நடைபெறும்போது அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : IPL 2026: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?




மேலும் கர்நாடகா மாநில கிரிக்கெட் அசோசியேஷனின் துணைத் தலைவர் சுஜித் சோமசுந்தர் இது தொடர்பாக கூறியதாவது, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர் பதிவுகளை வெளியிடவிருக்கிறோம். எந்த வழியாக ரசிகர்கள் மைதானத்தில் நுழைய வேண்டும், எந்த வழியாக வெளியேற வேண்டும் அவசர நிலைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரசிகர்களுக்கு விளக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சுமார் 33 ஆயிரம் ரசிகர்கள் வரை போட்டியை காண முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் முழு கொள்ளளவுடன் போட்டிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நுழைவு வாயில்களை விரிவுபடுத்துதல், வெளியேறும் வழிகளை கூடுதலாக அமைத்தல், அவசர மருத்துவ சேவைகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகிய பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்.. ஆதிக்கம் செலுத்தும் கோலி – ஏபிடி கூட்டணி!
கர்நாடகா அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் விரைவில் சின்னசாமி மைதானம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெங்களூருவில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.