Laksmi Kuberar Temple: வாழ்க்கை செழிக்கும்.. இந்த லட்சுமி குபேரர் கோயில் தெரியுமா?
அருள்மிகு மகாலட்சுமி குபேரன் கோயில், செல்வ வளம் மற்றும் நிறைவான வாழ்க்கைக்காக பக்தர்களால் வழிபடப்படுகிறது. 2005 இல் கட்டப்பட்ட இக்கோயிலின் வரலாறு, மகாலட்சுமி, குபேரன் மற்றும் பிற தெய்வங்களின் சன்னதிகள், அஷ்டலட்சுமி, அட்சய திருதியை விழா போன்ற சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.

இந்து மதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு தெய்வம் அர்ப்பணிக்கப்பட்டு குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. உதாரணமாக உணவுக்கு அன்னலட்சுமி, தைரியத்துக்கு காளி என கூறப்படும் அதேவேளையில் செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி பார்க்கப்படுகிறார். அதேபோல் நீங்காத செல்வத்தை அள்ளித்தருபவர் குபேரன். இவர்கள் இருவரும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து ஒரு கோயிலில் அருள்பாலித்து வருகின்றனர். அதனைப் பற்றி நாம் காணலாம். அந்த கோயிலானது விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு பாண்டிச்சேரி ரோடு பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு மகாலட்சுமி குபேரன் கோயில் என பெயர் கொண்டிருக்கும் இக்கோயிலானது தினமும் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த மகாலட்சுமி குபேரன் கோயில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை காணலாம்.
கனவில் வந்து உத்தரவு கொடுத்த மகாலட்சுமி
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு விதமான கோயில்கள் இருந்தாலும் செல்வத்தின் அதிபதியாக திகழும் மகாலட்சுமிக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எண்ணமாக இருந்து வந்தது. அதன்படி கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி கோயில் கட்டுவதற்கான முடிவு செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. இதற்காக பொதுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு திருப்பணிக்கு தேவையான நன்கொடை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் போது அதில் ஒரு பக்தர் வந்திருந்த பொதுக்குழு நிர்வாகிகளிடம் என்ன கோயில் கட்டப் போகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் மகாலட்சுமி குபேர கோயில் கட்டுவதாக இருக்கிறோம் என கூறிய போது அந்த பிரமுகர் தன்னுடைய எதிரில் இருக்கும் ஒரு புகைப்படத்தை காட்டி இந்த கோயில்தானே கட்டப் போகிறீர்கள் என கூறினார்.




அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்த நிலையில் எனக்கு நேற்று இரவு கனவிலேயே மகாலட்சுமி தோன்றி காட்சியளித்தார். நாளை உங்களை சந்திக்க கோயில் சார்பில் நிர்வாகிகள் வருவார்கள். அவர்களிடம் கோயில் கட்டுவதற்கான உத்தரவு கிடைத்து விட்டதாக கூறிவிடுங்கள் என மகாலட்சுமி சொன்னார் என தெரிவிக்க அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். 25 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பூமி பூஜை தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு மே நான்காம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரத்தில் திருநகர் என்ற பகுதியில் இந்த மகாலட்சுமி குபேரர் கோயில் ஆனது அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமி தனது முன் இரு கரத்தில் அபய முத்திரையுடனும் பின் திருகரங்களில் தாமரை மட்டும் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பிரகாரத்தில் மகாலட்சுமிக்கு இடது பக்கமாக குபேரன் தனது மனைவி சித்திரலேகாவுடன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அஷ்ட லட்சுமி தும்பிக்கையாழ்வார் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் கருடாழ்வார் ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோரும் இந்த கோயிலில் அமைந்துள்ளனர் கோயிலின் ஈசானிய மூலை பகுதியில் உற்சவ மகாலட்சுமி ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று பக்தர்கள் தங்கள் கைகளாலேயே மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய முடியும் என்பதை இந்த கோயிலின் சிறப்பாகும்.
வேண்டுதல்கள் மற்றும் பிரார்த்தனைகள்
இந்தக் கோயிலுக்கு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தினம்தோறும் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். பங்குனி உத்திரத்தின் போது நடைபெறும் திருக்கல்யாணத்தின் மறுநாள் திருமணம் ஆகாத ஆண் பெண் ஆகிய இரு பாலர்கள் கோயிலில் நடைபெறும் காப்பு கட்டும் வைபவத்தில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்து வகையான செல்வங்களும் கிடைத்து வாழ்க்கையில் தடைகள் நீங்கி நன்மைகள் பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மகாலட்சுமிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கு மகாலட்சுமி மீது சூரியக் கதிர்கள் படர்வது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.