Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரணி நட்சத்திரமா நீங்கள்?.. கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் இதுதான்!

Tamilnadu Temples: மிருகண்ட மகரிஷியின் யாகத்துடன் தொடர்புடைய இக்கோவிலில், அக்னிஸ்வரர் மேற்கு நோக்கியும், சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பரணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்வதால் பெரும் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோயிலில் பல தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது சிறப்பானதாகும்.

பரணி நட்சத்திரமா நீங்கள்?.. கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
அக்னீஸ்வரர் கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Jun 2025 12:10 PM

ஜோதிட சாஸ்திரமானது 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. கிரகங்கள் ராசிகளில் மாற்றம் கொண்டால் அது அனைவரையும் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ற வகையில் தாக்கும் என சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு என குறிப்பிடப்பட்ட கோயிலுக்கு சென்று வழிபட்டால் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கையாகும். அந்த வகையில் பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இக்கோயிலானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்லாடை என்ற ஊரில் அமைந்துள்ளது. மூலவராக அக்னீஸ்வரரும், அம்பாளாக சுந்தர நாயகியும் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலானது தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி காணலாம்.

கோயில் உருவான வரலாறு 

ஒரு முறை மிருகண்ட மகரிஷி இந்த கோயிலின் இறைவனான அக்னீஸ்வரனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கான பொருள்களை மக்களை வழங்கலாம் என கூறினார். அதன்படி தங்கம் கலந்த பட்டாடை மூன்று செய்து அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், இன்னொன்றை மிருகண்ட மகரிஷிக்கும், மூன்றாவது அந்த நாட்டின் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகத்தின் முடிவில் இறைவன் மற்றும் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டாடையை மகரிஷி யாக குண்டத்தில் போட்டுவிட்டார்.

இவ்வாறு செய்வதால் அவை இறைவனை அடைந்து விடுமா? என மக்கள் கேள்வி எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்திற்கு சென்று பார்த்தல் விபரம் புரியும் என அவர் பதில் அளித்தார். அதன்படி ஆர்வம் கொண்டு மக்கள் கோயிலுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல் யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்தது. இது எப்படி இங்கு வந்தது என மிருகண்ட மகரிஷியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் பொறுமையாக விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது அக்னி எனப்படும் நெருப்பின் பல வகைகள் உள்ளது. அதில் பரணி எனப்படும் ருத்ரக்னியும் ஒன்றாகும். இதுவே அக்னியில் இறைவனுக்கு நாம் போடும் பொருள்களை கொண்டு சேர்க்கிறது. இதனால் தான் இந்தக் கோயில் பரணி நட்சத்திரத்திற்குரிய கோவிலாக திகழ்கிறது என தெரிவித்தார்.

கோயிலின் சிறப்புகள்

இந்தக் கோயிலின் இறைவனான அக்னிஸ்வரன் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் மூலஸ்தானத்தில் இருக்கும் லிங்கத்தை சுற்றி தாழ்வான பகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்னி ஷோரூம் ஆக இறைவன் இருப்பதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வாழ்நாளில் அடிக்கடி இந்த கோயிலுக்கு சென்று அக்னிஸ்வரரை விசேஷ வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

இந்தப் கோயிலில் கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் ஹோமம் செய்து வழிபட்டால் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம் என்றும் மேற்கு நோக்கி அமையப்பட்டிருக்கும் கோயில்களில் பிரார்த்தனை மேற்கொள்வது விசேஷ பலன்களை தரும் எனவும் கூறப்படுகிறது அம்மனான சுந்தர நாயகி தெற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.

கல்வியில் வளர்ச்சி, செல்வ வளம், திருமணத்த, குழந்தை பாக்கியம், தொழில் லாபம், பணியிடங்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இறைவனை வழிபட்டு வைத்தால் அவை விரைந்து நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்தக் கோயிலின் பிரகாரத்தில் செல்வவிநாயகர், பாலமுருகன், மகாவிஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, துவார விநாயகர், சனி பகவான், புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், கல்யாணி, பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளது.

இந்தக் கோயிலில் சூரியனாக சிவனே மூலவராக இருப்பதால் நவகிரக சன்னதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கோயில் பற்றி தகவல் தரப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)