புனர்பூசம் நட்சத்திரமா நீங்கள்.. இந்த கோயில் சென்றால் பலன்கள் ஏராளம்!
வாணியம்பாடி அருகே உள்ள அதிதீஸ்வரர் கோயில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பிரம்மா மற்றும் சரஸ்வதியின் சாப விமோசனம் இங்கு நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கோயிலில் அதிதீஸ்வரர் சுயம்புலிங்கமாகவும், பிரகன் நாயகி அம்பாள் தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர்.

ஜோதிடத்தை பொருத்தவரை நவகிரகங்கள் தான் நம்முடைய வாழ்க்கையை இயக்குவதாக நம்பப்படுகிறது. இத்தகைய கிரகங்களின் செயல்பாடுகள் நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சாஸ்திரத்தில் பல்வேறு விதமான வழிபாடு தளங்கள் இந்த 27 நட்சத்திரங்களுக்கும் 12 ராசிகளுக்கும் நவகிரகங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோயிலாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கும் அதிதீஸ்வரர் திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இந்த கோயில் ஆனது தினமும் காலை 6:30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலையில் 5:00 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் தலவிருட்சம் அகண்ட வில்வ மரம் ஆகும். அதேபோல் தீர்த்தம் சிவ தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அருள்மிகு அதிதீஸ்வரர் கோயில் (Athitheeswarar Swamy Temple)உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோயில் உருவான வரலாறு
ஒருமுறை பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் பேச்சு வார்த்தையின் போது விபரீதம் ஏற்பட்டது. சரஸ்வதி தன்னை கேலி செய்து விட்டதாக தவறாக நினைத்த பிரம்மா அவளை சபித்தார். இதனால் சரஸ்வதி பேச்சு வலிமை மற்றும் நாக்கு வன்மையை இழந்து வாய் பேச முடியாதவர் ஆனார். ஒரு கட்டத்தில் தனது சாபத்தால் தான் சரஸ்வதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக வருந்திய பிரம்மா பூலோகத்தில் அவள் இருக்கும் இடத்தை அறிந்து சிறுங்கேரிக்கு வந்து சேர்ந்தார்.
தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் இருவரும் அங்கிருக்கும் சிவத்திருத்தத்தில் நீராடி இந்த கோயிலில் வீற்றிருக்கும் அதிதீஸ்வரர், பிரஹன் நாயகி அம்பாளையும் வணங்கி வழிபாடு செய்து தங்களது குறைகள் போக்கிட வேண்டினர். அவர்கள் முன் தோன்றிய இறைவன் சரஸ்வதியான வாணியிடம் பாடல் ஒன்றை இசைக்க சொல்ல அவரும் தன்னுடைய வீணை மூலம் பாடலிசைத்தார். அப்படியாக வாணி பாடியதால் இருப்பிடம் வாணிப்பாடி என அழைக்கப்பட்டு பின்னாளில் வாணியம்பாடி என மருவியது. அவர்கள் இருவரின் குறைகளும் நீங்கியது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் ஈசனான அதிதீஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். பிரகன் நாயகி என அழைக்கப்படும் பெரியநாயகி அம்பாள் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். மேலும் இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகப்பட்டவுடன் மான் மற்றும் முழு ஏந்தி சின்முத்திரை காட்டி அருள் பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கிழக்கு திசையிலும், மூன்று நிலை ராஜகோபுரங்கள் மேற்கு திசையிலும் கட்டப்பட்டுள்ளது. மேலும் சங்கரநாராயணர் சரஸ்வதி சப்த கன்னியர்கள், துவார கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியன், ஐயப்பன், காலபைரவர் ஆகியோர் இந்த கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.
புனர்பூச நட்சத்திரத்திற்கான கோயில்
காய்ச முனிவரின் தர்மபத்தினியான அதிதி புனர்பூசம் நட்சத்திரம் நாளில் இந்த கோயிலில் விரதம் இருந்து தேவர்களை பெற்றார் என புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த தலமாக இந்த இடம் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் புனர்பூசம் நட்சத்திரத்தில் நாம் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்தால் அது விருத்தியாகும் என நம்பப்படுகிறது. அதேசமயம் சரஸ்வதி தேவி வழிபட்டு அருள் பெற்ற ஸ்தலம் என்பதால் கல்வியில் சேர்க்கும் முன்பும், தேர்வு எழுதுவதற்கும் முன்பும், மாணவர்களை பெற்றோர்கள் இந்த கோயிலுக்கு அழைத்து வந்து வழிபடுகிறார்கள்.
அதேபோல் தொழில் விருத்தி அடைய வேண்டும் என நினைப்பவர்கள் இக்கோயிலில் வந்து அதிதீஸ்வரர் வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து மகிழ்கிறார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் எந்த துறையில் எத்தகைய தடைகள் இருந்தாலும் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவனுக்கு பால் தேன் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கோயிலில் திருவாதிரை மகா சிவராத்திரி சித்திரை பிரமோற்சவம் ஆகியவை வெகு விமரிசியாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை)