மகம் நட்சத்திரமா நீங்கள்.. இந்த கோயிலில் வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
Tamilnadu Temples: மகாலிங்கேஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கம் தவசி மேடையில் அமைந்துள்ளது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. பரத்வாஜ முனிவர் இங்கு தவம் செய்ததாகவும், ராமாயணத்துடன் இக்கோயிலின் தொடர்பு இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரை நம்முடைய வாழ்க்கையானது ஒன்பது கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் அடிப்படையில் செயல்படுவதாக ஐதீகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு தனி தெய்வங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சிம்ம ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஒரு கோயில் பற்றி காணலாம். மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்பது ஆன்மீக அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இதற்கு உதாரணமாக இந்தியாவில் பல தலைவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம். அந்த அளவுக்கு தலைமை பண்பும் தைரியமும் நிறைந்த இந்த ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லும் வழியில் விராலிப்பட்டிக்கு அருகில் ஒடுக்கம் தவசி மேடை என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
கோயில் உருவான வரலாறு
இந்தக் கோயில் உருவானதற்கு மிக நீண்ட வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது இலங்கையில் சீதையை மீட்ட ராமர் அயோத்தி திரும்பிய பிறகு பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அப்போதே தனக்கு உதவிய ஆஞ்சநேயரை கௌரவிக்கும் விதமாக தனக்கு பரிமாறிய இலையின் நடுவில் ராமர் ஒரு கோடு போட்டார். அதில் ஒரு பக்கத்தில் இருந்த உணவை அனுமனை உண்ணும் படி அவர் தெரிவித்தார். இப்படியான சம்பவம் நிகழ காரணமான பரத்வாஜ முனிவர் இந்த மகாலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டதாக புராணங்கள் சொல்கிறது.
மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவராவர். இக்கோயிலுக்கு வருகை தந்த பரத்வாஜர் ஒரு தவ மேடை அமைத்து அதில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை வழிபட்டார். அதனால் இந்த கோயில் இருக்கும் இடம் ஒடுக்கம் தவசி மேடை என பெயர் பெற்றது. இந்தக் கோயிலின் முன்பக்கத்தில் இரண்டு பீடங்கள் உள்ளது. அதன்படி சிவபெருமானை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது பட வேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்கள் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ஒவ்வொரு மாதமும் மகா நட்சத்திரம் நாளில் இக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோயிலின் சிறப்புகள்
அதனால்தான் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோயிலாக இந்த மகாலிங்கேஸ்வரர் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் மகாலிங்கேஸ்வரர் அவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என இரண்டு அம்பிகைகள் காட்சி தருகின்றனர். இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி என அருள்பாலிக்கும் இந்த அம்பிகைகளை வழிபட்டால் ஞான சக்தியான இறைவனை எளிதாக அடைய முடியும் என்பது ஐதீகமாக உள்ளது.
பொதுவாக சிவ ஆலயங்களில் வடகிழக்கு திசையில் காட்சி கொடுக்கும் பைரவர் இந்த கோயிலில் சிவனுக்கு நேர் எதிர் திசையில் அருள் பாலிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது உக்கிரம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக எதிரில் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பைரவர் சன்னதியில் பின்பக்கமாக உள்ள துளை வழியாக சிவபெருமானை தரிசித்து விட்டு பின்பு தான் பைரவரை வணங்கி கோயிலுக்குள் செல்லவே தொடங்குகிறார்கள். மேலும் சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் மூலவர் மகாலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி படுவது அதிசயமான நிகழ்வாகும். காலையில் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவதும் சிறப்பானதாகும். இக்கோயில் ஆனது காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த சிவன் கோயிலில் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோயில் பற்றிய தகவல்கள் அமைந்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை)