Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lord Murugan: 7 மாதம் மட்டுமே திறந்திருக்கும் முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?

இமாச்சலப் பிரதேசத்தின் குக்தி கிராமத்தில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோயில், முருகப்பெருமானின் அரிய ஆலயமாகும். கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமைந்த இக்கோயில், ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். முருகன் அவதாரக் கதையுடன் தொடர்புடைய இக்கோயில், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

Lord Murugan: 7 மாதம் மட்டுமே திறந்திருக்கும் முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
கார்த்திக் சுவாமி கோயில்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Jun 2025 15:18 PM

இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் இருந்தாலும் தமிழ் கடவுள் என அன்போடு பக்தர்களால் அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். சிவபெருமானின் மைந்தனாக அவதரித்த முருகன் ஆறுமுகமாகவும், ஆண்டியாகவும், கதிர்வேலனாகவும், கார்த்திகேயனாகவும் பக்தர்களுக்கு பல்வேறு பெயர்களில் அருள் பாலித்து வருகிறார். எந்த ஒரு கோவிலை எடுத்தாலும் அதில் முருகப்பெருமானுக்கு என தனி சன்னதி அமைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார். இந்த முருகனுக்கு உள்ளூர் முதல் உலகம் வரையில் பல்வேறு வகையிலான கோயில்கள் உள்ளது. அதேசமயம் குன்றின் மேல் இருப்பான் குமரன் என்பதற்கு ஏற்ப மலை சார்ந்த இடங்களில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் குக்தி கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கார்த்திக் சுவாமி கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

கார்த்திக் சுவாமி கோயில்

இந்த கோயிலானது அம்மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் உள்ள பழங்குடிப் பகுதியான பர்மௌரின் குக்டி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. உள்ளூரில் கேலாங் கோயில் என்று அழைக்கப்படும் கார்த்திக் சுவாமி கோயில் கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் மையமாக உள்ள இந்த கோயில் வளாகத்தில் கார்த்திக் கோயில் மற்றும் மராலி கோயில் என இரண்டும் உள்ளது. கெலாங் பாஜிர் என உள்ளூர் மக்களால் இந்த கார்த்திக் கோயில் அழைக்கப்படுகிறது. பசுமையான மலைப் பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நான்கரை ஆண்டுகள் மூடப்பட்டிருக்கும்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14 ஆம் தேதி சித்திரை வருடப்பிறப்பில் இருந்து தீபாவளி பண்டிகை வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த 4 மாதங்கள் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் அது மூடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கால இடைவெளியில் தெய்வங்கள் தேவலோகம் சென்று வருவதாக நம்பப்படுகிறது. இதனையும் மீறி அந்த காலக்கட்டத்தில் கோயில் செல்பவர்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் எனவும் மக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.

கோயில் உருவான கதை 

அதாவது பெற்றோர் தான் உலகம் என சுற்றி வந்து விநாயகர் மாங்கனியைப் பெற்றார். இதனால் கோபம் கொண்ட முருகன் தனது சதை மற்றும் பால் ஆகியவற்றை காணிக்கையாக அளித்து விட்டு கைலாயத்திலிருந்து புறப்பட்டார். வழியில் அவர் குக்தி கிராமத்தில் ஓய்வெடுத்ததாகவும், அந்த இடமே பக்தர்களால் கோயிலாக வழிபடப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது. பல தெய்வங்கள் குக்தி கிராமத்தில் அவரை இருக்க சொன்ன நிலையில் முருகன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் வந்து கார்த்திக் சுவாமியை யார் வந்து வழிபட்டாலும் அவர்களின் விருப்பம் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. முதலில் இந்த இடத்துக்கு பக்தர்கள் செல்ல முடியாத சூழல் இருந்தாகவும், முருகனிடம் வேண்டுதல் வைத்த பிறகு செல்ல வழி பிறந்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சுயம்புவாக தோன்றிய முருகன் சிலை இன்றளவும் உள்ளது. அதேசமயம் பக்தர் ஒருவர் கொடுத்ததும், கோயில் நிர்வாகம் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோயில் கதவுகளை மூடும் முன் தண்ணீர் நிறைந்த பானையை முருகன் முன் வைத்து விடுவார்கள். மீண்டும் ஏப்ரலில் திறக்கும்போது பானையில் நிறைய தண்ணீர் இருந்தால் அந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், இதனால் மக்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும். பாதி அல்லது அதற்கு குறைவாக இருந்தால் வறட்சி உண்டாகும் என நம்பப்படுகிறது. முருகனை வழிபடும் பக்தர்கள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதல்படி ஒரு சிவம்பு நிற கம்பளி, தொப்பி போன்ற உடையணிந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.