வைகாசி விசாகம்.. முருகனுக்கு 11 நாட்கள் விரதம்.. இவ்வளவு பலன்களா?
வைகாசி விசாகம், முருகப்பெருமானின் அவதார தினமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு இந்நாள் ஜூன் 9 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் பக்தர்கள் 11 நாட்கள், 6 நாட்கள் அல்லது விசாக தினத்தன்று விரதம் இருந்து வழிபடுகின்றனர். இந்த விரதம் குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி, திருமணம் போன்றவற்றிற்கு உதவும் என நம்பப்படுகிறது.

முருகப்பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது வைகாசி விசாகம். ஒவ்வொரு மாதமும் விசாகம் நட்சத்திரம் வந்தாலும், அவர் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் ஜூன் மாதம் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதேசமயம் பக்தர்கள் தங்கள் பங்கிற்கு விரத வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற செயல்களை இந்த சிறப்பு தினத்தில் செய்து முருகப்பெருமானிடம் தங்கள் வேண்டுதலை வைக்கின்றனர். இந்த நிலையில் வைகாசி விசாகத்திற்கு 21, 11, 6 நாட்கள் விரத முறையானது கடைபிடிக்கப்படுகிறது. இதில் நாம் 11 நாட்கள் விரத முறைகளைப் பற்றிக் காணலாம்.
வைகாசி விசாகத்தின் சிறப்பு
முருகப்பெருமான் பண்டைய காலம் தொடங்கி தமிழ் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். முருகு என்ற சொல் திரிந்து முருகனாக மாறியதாக சொல்லப்படுகிறது. முருகு என்றால் இளமை என்று பொருளாகும். வலிமை ஞானம் மற்றும் தைரியத்தின் அதிபதியாக கருதப்படும் முருகப் பெருமான் அனைத்து கடவுள்களுக்கு தளபதியாக அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்து கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து ஆறுமுகனாக தோன்றிய முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷ தினமாக வைகாசி விசாகம் உள்ளது. வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி திதியில் தான் முருகப்பெருமான் பிறந்தாலும் விசாக நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும் நாளில்தான் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.
விரதம் இருப்பதன் பலன்கள்
வைகாசி விசாக நாளை முன்னிட்டு 48, 21,11, 6 ஆகிய நாட்கள் பக்தர்கள் விரதம் அனுஷ்டிக்கலாம். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்களும், அதுவும் முடியாதவர்கள் 11 நாட்களும், இதுவும் முடியாதவர்கள் ஆறு நாள் அல்லது வைகாசி விசாக தினத்தன்று மட்டுமாவது விரதம் வழிபாடு மேற்கொள்ளலாம். 48 மற்றும் 21 நாட்களுக்கான காலங்கள் கடந்துவிட்ட நிலையில், 11 நாட்கள் மற்றும் 6 நாட்களுக்கான காலங்கள் உள்ளது. அதன்படி 2025 மே 30 முதல் 2025 ஜூன் ஒன்பதாம் தேதி வரை 11 நாட்கள் கணக்கிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்பவர்கள் ஜூன் 4ம் தேதியும், 3 நாட்கள் இருப்பவர்கள் ஜூன் ஏழாம் தேதியும் விரதத்தை தொடங்கி வழிபடலாம். இப்படியாக விரதம் இருந்து வழிபடுவதால் நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம், திருமண வரன், குடும்ப ஆரோக்கியம், செல்வ வளம் ஆகிய ஆகியவை சீறும் சிறப்புமாக இருக்கும் என்பதை நம்பிக்கையாகும்.
வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்பவர்கள் இந்நாளில் கண்டிப்பாக அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று விரத வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும்.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)