AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மழைக்காலத்தில் UTI தொல்லையா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை!

Urinary Tract Infection: மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைவது, ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிவது மற்றும் அதிக ஈரப்பதம் போன்ற காரணங்களால் சிறுநீர்ப் பாதைத் தொற்று (UTI) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் வருவது, அடிவயிற்று வலி அல்லது சிறுநீரில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

மழைக்காலத்தில் UTI தொல்லையா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை!
சிறுநீர்ப் பாதைத் தொற்றுImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Sep 2026 12:51 PM IST

மழைக்காலத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் தண்ணீர் குடிப்பது குறையலாம். இதனால் சிறுநீர் வெளியேறும் அளவும், எண்ணிக்கையும் குறைந்து, சிறுநீரகப் பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறாமல் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதேபோல், அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக பிறப்புறுப்பைச் சுற்றிய பகுதி நீண்ட நேரம் ஈரமாக இருக்கலாம். மழையில் நனைந்த ஆடைகளை நீண்ட நேரம் அணிந்திருப்பதும் சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்கி சிறுநீர்ப் பாதைத் தொற்று (UTI) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

ஈரமான ஆடைகள் கவனம்

மழையில் நனைந்த உடைகள் அல்லது ஈரப்பதம் நிறைந்த உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்ப்பது அவசியம். ஈரமான சூழல் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு சாதகமாக இருப்பதால், உடைகள் நனைந்தவுடன் அவற்றை மாற்றி, உடலை குறிப்பாக பிறப்புறுப்புப் பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். மழைநீர் நேரடியாக UTI-ஐ ஏற்படுத்துவதில்லை என்றாலும், மழைக்காலத்தில் உருவாகும் ஈரப்பதம், சுகாதாரக் குறைபாடு போன்ற காரணிகள் தொற்று அபாயத்தை மறைமுகமாக அதிகரிக்கலாம்.

தண்ணீர் குடிப்பதை குறைக்காதீர்கள்

மழைக்காலத்தில் தாகம் குறைவாக இருப்பதால் பலரும் வழக்கத்தைவிட குறைவாக தண்ணீர் குடிக்கின்றனர். இதனால் சிறுநீர் அதிக செறிவாகி, சிறுநீர் கழிக்கும் இடைவெளியும் அதிகரிக்கலாம். போதுமான திரவத்தை உட்கொள்வது மற்றும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்காமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். எனவே, மழைக்காலம் என்பதற்காக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை குறைக்கக்கூடாது.

UTI-யின் அறிகுறிகள் என்ன?

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் குறைந்த அளவில் வெளியேறுதல், அடிவயிற்றில் அசௌகரியம், துர்நாற்றம் அல்லது கலங்கலான சிறுநீர் போன்றவை UTI-யின் பொதுவான அறிகுறிகளாக இருக்கலாம். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தமும் காணப்படலாம். இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

சிறுநீரகத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாமல் UTI-ஐ விட்டுவிட்டால், தொற்று சிறுநீர்ப்பையில் இருந்து மேல்நோக்கி சிறுநீரகத்தை அடைய வாய்ப்புள்ளது. இதனால் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அதிக காய்ச்சல், குளிர்ச்சியுடன் நடுக்கம், முதுகு அல்லது பக்கவாட்டில் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றலாம். தொற்று ரத்தத்தில் பரவும் நிலை ஏற்பட்டால் அது ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

அடிக்கடி UTI வந்தால் காரணத்தை கண்டறிய வேண்டும்

UTI மீண்டும் மீண்டும் ஏற்படுபவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கற்கள், சிறுநீர் செல்லும் பாதையில் அடைப்பு, மலச்சிக்கல் அல்லது சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாதது போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, தொடர் தொற்று இருப்பவர்கள் மருத்துவரின் பரிசோதனை மூலம் உண்மையான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை பெறுவது முக்கியம்.

Also Read: தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? இரவில் சாப்பிட உதவும் 8 உணவுகள்!

மழைக்காலத்தில் UTI-யை தடுப்பது எப்படி?

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்காமல் இருப்பது, பிறப்புறுப்புப் பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது, ஈரமான ஆடைகளை உடனடியாக மாற்றுவது போன்ற எளிய நடவடிக்கைகள் UTI அபாயத்தை குறைக்க உதவும். பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு முன்புறத்திலிருந்து பின்புறமாக சுத்தம் செய்வதும் முக்கியமான சுகாதாரப் பழக்கமாகும். சிறுநீர் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையின்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது; தேவையற்ற ஆன்டிபயாட்டிக் பயன்பாடு மருந்து எதிர்ப்புத் தன்மை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us