தேர்தல் செலவுக் கணக்கில் முறைகேடு.. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தடை!!
Former Congress MLA Hasan Maulana Election Ban: தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறியதால், வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 05: தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு மாறாக, தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறிய காரணத்திற்காகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குத் தேர்தல் ஆணையம் கடுமையான தடையை விதித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசன் மௌலானா, தான் தேர்தலில் செலவழித்த தொகையை மறைத்து தவறான கணக்குச் சமர்ப்பித்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..”பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்!”.. கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!!
தவறான கணக்குக் காட்டிய அசன் மௌலானா:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அசன் மௌலானா, தேர்தலில் தான் செலவிட்ட தொகையை விடக் மிகக் குறைந்த அளவிலான கணக்கையே தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ளார். அவர் தேர்தலில் உண்மையில் ரூ. 32 லட்சத்தைச் செலவிட்டு விட்டு, அதிகாரப்பூர்வமாக ரூ. 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாகத் தவறான மற்றும் முறைகேடான தகவல்களை ஆவணங்களில் தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொகை வேறுபாட்டை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இது தேர்தல் சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதை உறுதி செய்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
சட்ட விதிகளும் தொடரும் கண்காணிப்பும்:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது பிரசாரச் செலவுகள், விளம்பரங்கள் மற்றும் பிற செலவினங்களின் துல்லியமானக் கணக்குகளைத் தேர்தல் முடிந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சியினரின் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், வெற்றி பெற்ற அல்லது போட்டியிட்ட வேட்பாளர்கள் தவறான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தால், அவர்கள் மீது தகுதிநீக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இதையும் படிக்க: கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..
3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை:
தேர்தல் செலவுக் கணக்குகளை உரியக் காலக்கெடுவுக்குள் நியாயமான முறையில் சமர்ப்பிக்கத் தவறியதாலும், தவறான புள்ளிவிவரங்களை வழங்கியதாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இதனால் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மௌலானா வரவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்குப் போட்டியிட முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.