ஒன்றரை வயது அர்ஷித் கொலை வழக்கு: 51 காயங்கள், பல மர்ம சம்பவங்கள்… அஷ்கர் – அகிலா மீது தீவிர விசாரணை
Nedumangad Child Murder Case: குழந்தையை அஷ்கர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அர்ஷித்தின் தாத்தா சுனில் குமார் குற்றம்சாட்டியுள்ளார். அகிலாவின் முதல் கணவர் அகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதும் தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அகிலா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 2, 2026: திருவனந்தபுரம் நெடுமங்காட்டில் ஒன்றரை வயது குழந்தையான அர்ஷித் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் மாற்றுத்தந்தையான அஷ்கர் மற்றும் தாய் அகிலா கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களைச் சுற்றிய பல்வேறு மர்ம சம்பவங்களும் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணைக்குள் வந்துள்ளன.
குழந்தையின் உடலில் 51 காயங்கள்:
குழந்தையின் உடலில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் பிறப்புறுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 51 காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. கடுமையான உடல் தாக்குதல்களே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் பழைய காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. கால்பாதம், விரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட காயங்கள் சூடான பொருளால் சுட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட அர்ஷித்தை அஷ்கர், பனவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் எஸ்.ஏ.டி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உணவு தொண்டையில் சிக்கியதால் குழந்தை வாந்தி எடுத்ததாக அஷ்கர் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை இந்த விளக்கத்தை மறுத்துள்ளது.
குழந்தை உயிரிழப்பில் வெளியான அதிர்ச்சி:
குழந்தையை அஷ்கர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அர்ஷித்தின் தாத்தா சுனில் குமார் குற்றம்சாட்டியுள்ளார். அகிலாவின் முதல் கணவர் அகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதும் தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அகிலா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறயின்கீழ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திலும் அஷ்கருக்கு தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அஷ்கரின் முதல் மனைவி அமீனாவும் கடுமையான தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அர்ஷித்தின் இரண்டு கைகளும் முறிந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. அப்போது சைக்கிளில் இருந்து விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக அகிலா விளக்கம் அளித்திருந்தார். தற்போது அந்த காயங்களும் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.