ரயில்வே காவலர் மீது துப்பாக்கி சூடு…சக காவலர் வெறிச் செயல்…என்ன காரணம்!
Railway Police Shot Died: சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரில் ரயில்வே காவலரை சக காவலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காவலர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரில் உள்ள ஜஞ்ச்கீர் – சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ். லேடர். இவர்,ராய்கர் பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த உடன் பணி புரிந்து வரும் மற்றொரு தலைமைக் காவலரான பி.கே. மிஸ்ராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இரு காவலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
இதில், ஆத்திரம் தீராத தலைமைக் காவலர் எஸ். லேடர் திடீரென தனது சர்வீஸ் ரிவால்வரை எடுத்து பி. கே. மிஸ்ராவை சுட்டதாகக் கூறப்படுகிறது. அவரை தடுக்க வந்த மற்றவர்களையும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலைமைக் காவலர் பி. கே. மிஸ்ரா குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மற்ற காவலர்கள் லேசான காயமடைந்தனர்.
மேலும் படிக்க: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!




ரயில்வே காவலரை சுட்டு கொன்ற சக காவலர்
இது குறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ராய்கர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் மர்க்கம் கூறுகையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் ஒரு ஆர்பிஎஃப் தலைமைக் காவலர் ஒருவர் தன்னுடன் பணி புரிந்து வரும் மற்றொரு தலைமைக் காவலரை தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக் கொன்றதாகக் தகவல் கிடைத்தது.
தலைமைக் காவலர் எஸ். லேடர் கைது
அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்து கிடந்த தலைமைக் காவலர் பி. கே. மிஸ்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் சரியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும், தலைமைக் காவலர் எஸ். லேடர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க: காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலன்.. தானும் தற்கொலை.. பகீர் சம்பவம்!
ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு “சீல்”
பிலாஸ்பூர் ஆர் பி எஃப் ஐ ஜி முனாவ்வர் குர்ஷித் மற்றும் தடயவியல் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஆர் பி எஃப் காவல் நிலையம் பூட்டி “சீல்” வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் ராய்கர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.