4 நாட்கள் பயணம்.. ஜப்பான், சீனா செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன? முழு விவரம்
PM Modi Japan China Visit : பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ஜப்பான், சீனா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலில் ஜப்பான் புறப்படுகிறார்.

டெல்லி, ஆகஸ்ட் 28 : அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி (PM Modi Japan China Visit) ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமான மூலம் ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். அங்கு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். சமீபத்தில் கூட, பிரதமர் சைப்ரஸ், குரோஷியா, கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக, கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணங்களில் முக்கிய தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.
ஜப்பான், சீனா செல்லும் பிரதமர் மோடி
அதைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான், சீனா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக மோதல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று இரவு தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்படுகிறார். 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை ஜப்பானில் தரையிறங்குவார். அங்கு ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.




மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். 2014 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து பிரதமர் மோடியின் எட்டாவது ஜப்பான் பயணமாகும். கடைசியாக 2018ஆம் ஆண்டு ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
Also Read : பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் ரத்து.. காரணம் என்ன?
திட்டம் என்ன?
தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி தியான்ஜினில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
2025 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட, 20 உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பல தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Also Read : இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம்.. பிரதமர் மோடியை சந்தித்த சுபான்ஷு சுக்லா..
பிரதமர் மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா 2017ஆம் ஆண்டு இருந்து வருகிறது. மேலும், 2022-23ஆம் ஆண்டில் அமைப்பின் தலைமை பொறுப்பையும் இந்தியா வகித்தது. எனவே, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பொருளாதாரம், பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.