நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!
NEET PG 2025 Exam: நீட் பிஜி 2025 தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சமத்துவமின்மை ஏற்படும் என மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம், இரண்டு ஷிப்ட் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது எனக் கருதி, தேர்வை ஒரே ஷிப்ட்டில், 202 ஜூன் 15 அன்று நடத்த உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மே 30: நீட் பிஜி 2025 தேர்வை (Neet PG Exam) ஜூன் 15-ஆம் தேதி ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் (Supreme Court Order) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்திருந்தது. தேர்வில் சமத்துவம் இருக்காது எனும் காரணத்தால் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். “இரு ஷிப்ட் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது” என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். “தாமதம் ஏற்படும்” என வாரியம் வாதிட்டாலும், நீதிமன்றம் ஏற்க மறுத்தது. நீதிமன்றம் தேர்வை ஒரே ஷிப்ட்டில், நேர்மையாக நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்தரவு அளித்தது.
நீட் பிஜி 2025 தேவை ஒரே ர்ஷிப்ட்டில் நடத்த வேண்டும்
வருகிற 2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் பிஜி (NEET-PG) 2025 தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு (NBE) உத்தரவிட்டுள்ளது. இதற்குமுன், 2025ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள், குறிப்பாக மருத்துவர் அதிதி உள்ளிட்டோர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பு அளிக்காது
இந்த வழக்கு இன்று (மே 30) நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார், மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “தேர்வை இரண்டு ஷிப்ட்களில் நடத்துவது அதிகாரத்துடன் கூடிய தன்னிச்சையான அணுகுமுறை. இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது. இது மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பு அளிக்காது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.




தேசிய தேர்வுகள் வாரியத்தின் விளக்கம்
வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிந்தர் ஆச்சார்யா நீதிமன்றத்தில் வாதிட்டார்:
“தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்துவதற்கான தேவையான வைஃபை, கணினி மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்ட மையங்கள் போதிய அளவில் இல்லை. எனவே இரண்டு ஷிப்ட்களில் நடத்தும் தீர்வு எடுக்கப்பட்டது. மேலும், 2.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் வெறும் சிலரே மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இப்போது நீதிமன்ற தலையீடு ஏற்பட்டால் தேர்வே ரத்து செய்ய நேரிடும். அதனால் மாணவர் சேர்க்கை தாமதமாகும்” என கூறினார்.
மனுதாரர்களின் முக்கிய வாதம்
மனுதாரர்கள், “இரண்டு ஷிப்ட்களில் தேர்வை நடத்துவது அரசியலமைப்பின் பிரிவு 14 இன் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுவதாகும். ஒவ்வொரு ஷிப்டிற்கும் வினாத்தாள் வெவ்வேறு இருப்பதால், மதிப்பீட்டில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இது வெளிப்படைத்தன்மையற்றதும், நியாயமற்றதுமான முறையாகும்” என வலியுறுத்தினர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேசிய அளவில் ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்தும் வசதிகள் இல்லை என்ற காரணங்களை ஏற்க இயலாது. இரண்டு ஷிப்ட்களில் வினாத்தாள்கள் மாறுபடுவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இரண்டு ஷிப்ட் முறையை ரத்து செய்து, நீட் பிஜி தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், தேர்வை வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும், தேர்வுக்குப் பத்தொன்பது நாட்கள் உள்ள நிலையில் தேவையான மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.