நகைக் கடன் விதிகள் தளர்த்தப்படுமா? ஆர்பிஐக்கு பரிந்துரைத்த நிதியமைச்சகம்!
RBI Gold Loan New Rules : நகைக் கடனுக்கான புதிய விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அண்மையில், நகைக் கடன் பெற 9 புதிய விதிகளை ரிசர்வ் வங்கி விதித்திருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த நகைக் கடன் விதிகளை தளர்த்த கோரி, நதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி, மே 30 : நகைக் கடனுக்கான புதிய விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், புதிய விதிமுறைகளை 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படுத்தவும் நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அண்மையில், தனிநபர்களுக்கு வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி 9 புதிய விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது. இந்த விதிமுறைகளை சமானியர்களை கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் நகைக் கடன் பெறுவது சிரமம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
ரிசர்வ் வங்கியின் நகைக் கடன் புதிய விதிமுறைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நகைக்கடன் விதிகளை கடுமையாக எதிர்த்தது. அண்மையில் கூட, தமிழக முதல்வர் ஸ்டாலின் நகைக் கடன் விதிகள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.




இதில், நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடனுக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில், நகைக் கடனுக்கான புதிய விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
ஆர்பிக்கு பரிந்துரைத்த நிதியமைச்சகம்
Draft Directions on Lending Against Gold Collateral issued by the @RBI have been examined by @DFS_India under guidance of Union Minister for Finance and Corporate Affairs Smt. @nsitharaman. @DFS_India has given suggestions to the @RBI to ensure that the requirements of the…
— Ministry of Finance (@FinMinIndia) May 30, 2025
அதன்படி, பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதோது, ரூ.2 லட்சத்துக்கு குறைவாக நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளை 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படுத்தவும் நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, அடகு வைக்கப்படும் நகைகளுக்கு 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 9 விதிகளை ரிசர்வ் வங்கி விதித்தது குறிப்பிடத்தக்கது.