தங்கம் அடகு வைக்கும் விதிமுறைகள்… கூட்டுறவு வங்கிக்கு எப்படி? அமைச்சர் சொன்ன தகவல்!
Minister's Gold Loan Clarification : புதிதாக தங்க நகைக்கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி 9 விதிமுறைகளை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) சமீபத்தில் தங்க நகை கடன் (Gold Loan) பெறுவதற்கான 9 புதிய விதிமுறைகளை அறிவித்திருந்தது. குறிப்பாக 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும், தங்கத்தின் தூய்மை சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்பது போன்ற முக்கிய விதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விதிமுறைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகைக்கடன் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் மாநில தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது
மேலும் நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார். தொடக்க வேளாண்மை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. இந்த ஆண்டு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தங்க நகைக் கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள 9 கட்டுப்பாடுகள்
- இனி தங்க நகைகளுக்கு 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். உதாரணமாக நாம் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றால் ரூ.75,000 வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
- தங்கம் நம்முடையது என நிரூபிக்க உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
- வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்கும்போது தங்கத்தின் தூய்மை சான்றிதழை பெற வேண்டும். இதனால் வாடிக்கையாளர் மற்றும் கடன் வழங்குபவர்களிடையே வெளிப்படைத்தன்மை உருவாகும்.
- தங்க நாணயங்களை பொருத்தவரை வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களை மட்டுமே அடகு வைக்க முடியும்.
- வங்கிகள் விற்பனை செய்யும் 925 துாய்மை கொண்ட வெள்ளி நாணாயங்கள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை வைத்து கடன் பெறலாம்.
- ஒரு நபர் அதிக பட்சமாக 1 கிலோ தங்க நகைகளை வைத்து மட்டுமே கடன் பெற முடியும். அதே போல 50 கிராம் தங்க நாணயங்களை வைத்து மட்டுமே கடன் பற முடியும்.
- தங்கத்தின் மதிப்பு 22 காரட் என்ற அளவிலேயே நிர்ணயம் செய்யப்படும். அதன் அடிப்படையிலே கடன் வழங்கப்படும்.
- தங்கத்தின் மதிப்பு, விலை, கடன் விபரங்கள் என அனைத்து தகவல்களும் எழுத்து வடிவத்தில் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்.
- கடனை திருப்பி செலுத்திய பிறகு 7 வேலை நாட்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை திருப்பி தராவிட்டால், ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.