நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!
Man Killed His Wife Over Suspicion | ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாய்வாணி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அவரின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத், நவம்பர் 21 : ஆந்திர (Andhra) மாநிலம், சிந்தகாணி, நேரடா கிராமத்தை சேர்ந்தவர் கோகுல சாய்வாணி. 36 வயதான இவருக்கு திருமணமாகி கணவன், பிள்ளைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு திருமண மண்டபத்தில் கூலி வேலையும் அவர் செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.
மறைந்து இருந்து மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்திய கணவன்
சாய்வாணி தனியாக வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில், அவரது கணவருக்கு அவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (நவம்பர் 20, 2025) அன்று சாய்வாணியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்த அவரது கணவர், அவர் மண்டபத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சாய்வாணி கத்தி கூச்சலிட தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவின் ‘மோஸ்ட் வான்டட்’ கேங்ஸ்டர் “அன்மோல் பிஷ்னோய்”.. நாடு கடத்தப்பட்டு கைது
தடுக்க வந்த மகளையும் கத்தியால் குத்திய தந்தை
தாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது மகள் ஓடி வந்துள்ளார். அப்போது தனது தந்தை, தாயை கத்தியால் குத்துவதை கண்ட மகள் தந்தையை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாஸ்கர் தனது மகளையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவரும் படுகாயமடைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில், பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தாய் மற்றும் மகள் பலத்த கத்தி குத்துக்கு ஆளான நிலையில், கழுத்தில் வெட்டுப்பட்டதால் சாய்வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : மங்காத்தா பாணியில் ஏடிஎம் வாகனம் கடத்தல்.. ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்து கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு உயிர் இல்லாமல் கிடந்த சாய்வாணியை மீட்டு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள பாஸ்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.