பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த 13 வயது சிறுமி பலி.. அதிர்ச்சி சம்பவம்!
13-Year-Old Student Dies by Jumping From Building | மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சக மாணவர்கள் கிண்டல் செய்தது, பள்ளியில் இருந்து பெற்றோரை அழைத்தது என கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மும்பை, நவம்பர் 24 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம், ஜல்னா மாவட்டம், மாஸ்காட் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆரோகி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 23, 2025) வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு உடலில் பலத்த காயமடைந்த நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்துள்ளார்.
3வது மாடியில் இருந்து குதித்த மாணவி பரிதாப பலி
மாணவி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : மூளைச்சலைவை செய்வதே ஷாஹீன் டாஸ்க்.. உத்தரப்பிரதேசத்தில் 2 மருத்துவர்கள்.. வெளியான ஷாக் தகவல்கள்!




கிண்டல் மற்றும் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவு எடுத்த மாணவி
மாணவியின் மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியுடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மாணவியை சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து மாணவி ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : புதுச்சேரி வந்த தனியார் பேருந்து விபத்து – இருவர் பலி.. முழு விவரம்!
இந்த நிலையில் தான் மாணவி படிப்பில் மந்தமாக இருப்பதாக கூறி அவரது பெற்றோரை ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்துள்ளனர். இதன் காரணமாக கடும் பயத்தில் இருந்த மாணவி இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.