மீண்டும் மீண்டுமா… 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. .. தமிழகத்தில் என்ன நிலை?
India Covid Cases : இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 4,000-ஐ நெருங்க உள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், கேரளாவில் அதிகபட்சமாக 1,435 ஆக பாதிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூன் 02 : இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து (india covid cases) வருகிறது. தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்க உள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்தில் பரவிய கொரோனா தொற்று, அடுத்தடுத்து பல்வேறு நாடுகளில் பரவியது. 2025 மே மாதத்தில் இருந்தே, இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் 4,000-ஐ நெருங்க உள்ளது.
4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு
2025 ஜூன் 2ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,435 பேரும், மகாராஷ்டிராவில் 506 பேரும், டெல்லியில் 483 பேரும், மேற்கு வங்கத்தில் 339 பேரும், குஜராத்தில் 338 பேரும், உத்தர பிரதேசத்தில் 157 பேரும், தமிழகத்தில் 189 பேரும், ஆந்திராவில் 30 பேரும், கர்நாடகாவில் 253 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




டெல்லியைத் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 22 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே, நுரையீரல் பிரச்னை இருந்தது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் மூச்சுக்குழாயில் பிரச்னை இருந்த வந்த நிலையில், 25 வயதான நபர் கொரோனாவால் இறந்தார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் மொத்தம் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு சொல்வது என்ன?
4 new deaths from COVID-19, active cases near 4,000 in India
Read @ANI Story | https://t.co/PALem0EO5t#Covid #Health pic.twitter.com/RoEQdpQ3cT
— ANI Digital (@ani_digital) June 2, 2025
கொரோனா பாதிப்பு அதிகரிப்பை அடுத்து, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், காய்ச்சல், சளி, சுவாச பிரச்னை இருப்பவர்கள் மருத்துவமனை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ராஜீவ் பாஹ்ல் கூறுகையில், “நாட்டின் மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்தோம். அதில், தற்போது பரவி வரும் வைரஸ், ஓமிக்ரானின் துணை மாறுபாடுகள் என்பதையும், அவை தீவிரமானது அல்ல என்பதையும் தெரியவந்துள்ளது” என்றார்.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் கூறுகையில், “தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. கொரோனா தொற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொற்று லேசானது. மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.