ஆந்திர பிரதேச கிராமங்களில் கொட்டும் வெந்நீர்.. பொதுமக்கள் அவதி!
Hot Water Flowing In Andhra Villages | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருசில கிராமங்களில் குழாய்கள், கிணறுகளில் இருந்து சுட சுட வெந்நீர் வருகிறது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்த முடியாமல் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அமராவதி, செப்டம்பர் 12 : ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தில் உள்ள ஒருசில கிராமங்களில் குடிநீர் குழாயகள், கிணறுகளில் கொதிக்கும் தண்ணீர் வருவதன் காரணமாக அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், கோததகுடேம் மாவட்டத்தில் உள்ள மாணு குரு, பாகிடேறு, கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சிக்கலை எதிர்க்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இயற்கையாகவே குழாய்கள் மற்றும் கிணறுகளில் இருந்து சூடான தண்ணீர் வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொதிக்கும் வெந்நீர் – கிராம் மக்கள் கடும் அவதி
இந்த கிராமங்களை மழை மற்று குளிர் காலங்களின் போது, காலையிலேயே புகை போல மூடுகின்றன. அந்த பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை குழாய்கள், பம்பு செட்டுகள், கால்வாய்கள் என எங்கு பார்த்தாலும் ஆவி பறக்க கொதிக்கும் வெந்நீர் கொட்டுகிறது. இதன் காரணமாக இயற்கையாக கிடைக்கும் நீரை பயன்படுத்த முடியாமல் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள், தண்ணீரை குளிர வைத்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அவசர தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்த சிக்கல் ஏற்படுகிறது.
இதையும் படிங்க : அன்று விமர்சனம்.. இன்று உலகின் கவனம்! BRICS-ல் இந்தியாவின் புதிய பலம்
நிலக்கரி சுரங்கத்தால் தண்ணீர் சூடாக மாறுகிறதா?
இந்த கிராமங்கள் உள்ள நில பகுதிகளுக்கு அடியே நிலக்கரி சுரங்கம் இருக்கிறது. இதன் காரணமாக தான், இவ்வாறு பூமியில் இருந்து வரும் தண்ணீர் மிகவும் சூடாக வருவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் மழை பெய்து முடித்த உடன், பெண் ஒருவர் அருகில் உள்ள கிணற்றில் இருந்து வெந்நீர் பிடித்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் இயற்கை நீர்நிலைகளில் குளிர்ச்சியான நீர் வரும். ஆனால், இந்த கிராமங்களில் வழக்கத்திற்கு மாறாக வெந்நீர் வருவது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பலரும் வியப்புடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.