Corona Virus: கொரோனா பாதிப்பு .. இந்தியாவில் எத்தனை பேருக்கு தொற்று?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளடு. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. புதிய வகை கொரோனா வைரஸ் பரவலுக்கான அறிகுறிகளும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, மே 28: இந்தியாவில் கொரோனா பாதிப்பு (Corona Virus) மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 2025 மே 27 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1,010 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி NB.1.8.1 மற்றும் LF.7 வகை வைரஸ்கள் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 1000 பேரில் 335 பேர் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்திலும் 4 பேருக்கு கொரோனா தொற்று (Covid 19) உறுதியாகியுள்ளது.இப்படியான நிலையில் அனைத்து நோயாளிகளையும் பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்றின் தீவிரம் மிக குறைவாக இருப்பதாகவும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது.
தாக்குதலுக்கு உண்டானவர்களின் விவரம்
https://covid19dashboard.mohfw.gov.in/ என்ற மத்திய அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஆந்திராவில் 4 பேரும், சத்தீஸ்கர் மற்றும் கோவா மாநிலங்களில் தலா ஒருவரும், டெல்லியில் 99 பேரும், குஜராத்தில் 76 பேரும், ஹரியானாவில் 8 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், மத்திய பிரதேசத்தில் 2 பேரும், மகாராஷ்டிராவில் 154 பேரும், புதுச்சேரி மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும், ராஜஸ்தானில் 11 பேரும், தமிழ்நாட்டில் 3 பேரும், தெலுங்கானாவில் ஒருவரும், உத்தர பிரதேசத்தில் 15 பேரும், மேற்கு வங்கத்தில் 11 பேரும் என 753 புதிய கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிகிச்சையில் இருந்து வரும் 305 பேரையும் சேர்த்து மொத்தம் 1010 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிராவில் 3 பேரும், கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு பேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் தான் மொத்தம் 430 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் மகாராஷ்டிராவில் 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 154 பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். நோய் தொற்று வேகமாக பரவி வருவதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் இந்த புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சோர்வு, நாசி நெரிசல் ,தலைவலி, குமட்டல், இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற பொதுவான அறிகுறிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் நீடித்தால் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.