சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு போர்டலில் சைபர் தாக்குதல்: மாணவர்கள் கடும் அவதி
மறுமதிப்பீட்டு போர்டல் முதலில் மே 29ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. பின்னர் ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றும் தொடங்கப்படாமல் இறுதியாக ஜூன் 2ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த போர்டல் மூலம் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சரிபார்க்கவும், மறுமதிப்பீடு கோரவும் விண்ணப்பிக்க முடியும்.
ஜூன் 3, 2026: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டு போர்டல் தொடங்கிய முதல் நாளிலேயே தொழில்நுட்ப கோளாறுகள், உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சைபர் தாக்குதல் குற்றச்சாட்டுகள் காரணமாக மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றிகரமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்ட தகவலின்படி, மறுமதிப்பீட்டு போர்டல் ஜூன் 2ஆம் தேதி அதிகாலை செயல்பாட்டுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே “தீங்கிழைக்கும் நபர்கள்” சைபர் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல்:
குறிப்பாக, இரண்டு நிமிடங்களில் சுமார் 15 லட்சம் ஹிட்ஸ் மூலம் ‘டினையல் ஆஃப் சர்வீஸ்’ (DoS) தாக்குதல் நடத்தப்பட்டதுடன், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற கோப்பு அணுகல் முயற்சிகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போர்டல் ஒரே நேரத்தில் சுமார் 14 ஆயிரம் பயனர்களை கையாள்ந்ததுடன், இரவு 10 மணி நிலவரப்படி 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மறுமதிப்பீட்டு போர்டல் முதலில் மே 29ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. பின்னர் ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றும் தொடங்கப்படாமல் இறுதியாக ஜூன் 2ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இந்த போர்டல் மூலம் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சரிபார்க்கவும், மறுமதிப்பீடு கோரவும் விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்கள் சந்தித்த பிரச்சனைகள்:
ஆனால், பல மாணவர்கள் பணம் செலுத்திய பின்னரும் விண்ணப்பம் தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டினர். டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “UPI மூலம் ரூ.175 கட்டணம் செலுத்தினேன். பணம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தும், போர்டலில் ‘Payment Failed’ என்று காட்டியது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: 2 வயது தம்பியுடன் பள்ளிக்கு செல்லும் 9 ஆம் வகுப்பு மாணவி.. இணையத்தை கலங்க வைத்த சிறுமியின் கதை!
மேலும், பலர் உள்நுழைய முடியாமல் சிரமப்பட்டதாக கூறினர். சில மாணவர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டும் போர்டல் ஏற்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதேபோல், விடைத்தாள்களின் ஸ்கேன் நகல்கள் இதுவரை கிடைக்காததால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:
மாணவர்கள் ஆதார் எண் மூலம் சிபிஎஸ்இ இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் இல்லாத மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மறுமதிப்பீட்டு மற்றும் சரிபார்ப்பு விண்ணப்பங்களுக்கான போர்டல் ஜூன் 6ஆம் தேதி நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.