முதலில் நாயகன் படத்தில் சிவாஜி நடிக்கவிருந்தாரா? தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்
Nayakan with Sivaji and Kamal : மணிரத்னம் - கமல்ஹாசன் ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்துள்ள தக் லைஃப் வருகிற ஜூன் 5, 2025 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் நாயகன் படத்தில் முதலில் சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைக்க, ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் நாயகன் படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து படக்குழு புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாயகன் படத்தில் சிவாஜி கணேசன் ?
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி முதன்முறையாக இணைந்த நாயகன் படம் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை முக்தா ஃபிலிம்ஸ் சார்பாக முக்தா ஸ்ரீநிவாசன், முக்தா வி.ராமசாமி இணைந்து தயாரித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாசனின் மகன் முக்தா ரவி நாயகன் படம் உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, முக்தா ஃபிலிம்ஸ் சார்பாக தி காட்ஃபாதர் படத்தின் பாதிப்பில் தமிழில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டோம். அந்தப் படத்தை என்னுடைய சகோதரர் முக்தா எஸ்.சுந்தர் இயக்குவதாக இருந்தது. அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், அமலா ஆகியோரை வைத்து எடுக்க திட்டமிட்டோம். படத்தை விளம்பரத்தையும் வெளியிட்டோம்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கமல்
View this post on Instagram
அதன் பிறகு கமலின் நண்பரும் கே.பாலசந்தரின் உதவியாளருமான அனந்து, எங்களிடம் சிவாஜி கணேசன் – கமல்ஹாசன் காம்பினேஷன் வேண்டாம். கமலை வைத்து மட்டும் எடுக்கலாம் என ஒரு ஐடியா சொன்னார். பின்னர் கமல் எங்களிடம் மணிரத்னம் வரதராஜன் என்பவரைப் பற்றி கதை வைத்திருக்கிறார் அதை கேளுங்கள் என்றார். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே கதை தான் என்பதால் ஒப்புக்கொண்டோம்.
6.30 மணி நேரப் படத்தை எடுத்த மணிரத்னம்
ஆனால் திரைக்கதையை முழுமையாக எழுதாமல் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். ஒருநாளைக்கு 5, 6 காட்சிகள் தான் எடுப்பார்கள். அதற்கு முன் கமல் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை. அந்த காலகட்டத்திலேயே ரூ.1 கோடி, 10 லட்சம் பட்ஜெட் ஆனது. கடைசியாக 6.30 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருந்தது. எடிட்டர் லெனின் தான் அந்தப் படத்தின் கதையை பாதிக்காமல் 2.30 மணி நேரமாக எடிட் செய்தார் என்றார்.
தக் லைஃப் உருவான விதம்
இயக்குநர் தான் அளித்த பேட்டிகளில் நடிகர் கமல்ஹாசன் அமர் ஹை என்ற பெயரில் ஒரு கதை வைத்திருந்ததாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நாயகன் பட சாயலில் இருந்ததால் அதை வைத்து திரைக்கதை அமைத்ததாகவும் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனும், நாயகன் சாயலில் இருக்கும் வேறுபடம் எனவும் இந்தப் படத்தின் கதை டெல்லியில் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.