Cinema Rewind: பறிபோன முக்கிய வாய்ப்பு.. நடிகர் ஆனந்த் வாழ்க்கையில் நடந்த சோகம்!
மணிரத்னத்தின் "திருடா திருடா" படத்தின் மூலம் பிரபலமான ஆனந்த், தற்போது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய சில படங்கள் மற்றும் கே.பாலசந்தர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது இளம் வயதில் எடுத்த முடிவுகளால் ஏற்பட்ட இழப்புகளை பற்றியும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தான் செய்த மிகப்பெரிய முட்டாள்தனமான விஷயத்தை 90களின் காலக்கட்டத்தில் ரசிகர்களிடம் மிக பிரபலமாக திகழ்ந்த நடிகர் ஆனந்த் (Actor Anand) தெரிவித்துள்ளார். அமீர் ஜான் இயக்கிய வண்ண கனவுகள் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் (ManiRatnam) இயக்கிய திருடா திருடா படம் மூலம் ரசிகர்களிடத்தில் பரீட்சையமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என இன்றைக்கும் அசத்தி வரும் ஆனந்த் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைப் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி காணலாம். சினிமா எனக்கு கற்றுக்கொடுத்தது என்னவென்று கேட்டால், என் வாழ்க்கையின் கனவு, லட்சியம் எல்லாம் சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்பதாக இருந்தது. ஆரம்பத்தில் கமல், ரஜினியை தாண்டி வந்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் போக, போக அது முடியாது என தெரிந்தது. இருந்தாலும் என்னுடைய லட்சியத்தை இன்றைக்கும் நான் எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறேன்.
18 வயதில் எல்லாம் கிடைத்தது
சினிமாவில் முன்னுக்கு வரும் சமயத்தில் வசனம் எழுதிய பேப்பரெல்லாம் கையில் கிடைக்காது. உங்களை நீங்கள் நிரூபிக்கும் வரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னம்பிக்கையே இழக்கும் அளவுக்கு தான் மரியாதை கிடைக்கும். நான் என்னுடைய முதல் படம் பண்ணும்போது எனக்கு 18 வயது கூட ஆகவில்லை. பட வாய்ப்பு கிடைத்தது. நடிப்புக்கு எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. வண்ண கனவுகள் படம் நன்றாக ஓடியது. அடுத்ததாக பூந்தோட்ட காவல்காரன், சத்யா ஆகிய வாய்ப்புகளும் கிடைத்தது.
18 வயதுக்குள் நான் கார் வாங்கும் அளவுக்கு உயர்கிறேன். அப்ப எனக்கு பெரிய அளவில் பக்குவமும் இல்லை. அதேசமயம் நான் நினைத்தது நடக்கிறது என தன்னம்பிக்கை உண்டானது. என்னிடம் அந்த சமயத்தில் எல்லாம் கதையே சொல்ல மாட்டார்கள். நான் தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட படம் ஹீரோவாகவும், மலையாளத்தில் நிறைய படம் வில்லனாகவும் நடித்திருக்கிறேன். நான் இந்த மாதிரி கேரக்டர் தான் செய்வேன் என நினைப்பதில்லை. அதனால் தான் வெவ்வேறு விதமான கேரக்டரில் நடிக்க முடிந்தது.




பறிபோன சூப்பரான வாய்ப்பு
நான் 33 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி கொண்டிருக்க காரணம் திருடா திருடா படம். மணிரத்னம் இயக்கிய அப்படம் வெளியானபோது 23 வயது தான் ஆகியிருந்தது. அவர் கேரியரின் உச்சத்தில் இருந்த நேரம் அது. மௌன ராகம் படத்தில் கார்த்திக் கேரக்டருக்கு ஆடிஷன் செய்தார். ஆனால் சின்ன பையனாக இருக்கிறேன் என மறுத்து விட்டார். தொடர்ந்து அக்னி நட்சத்திரம் படத்தில் ஏதாவது கேரக்டர் கொடுக்கலாம் என முடிவு செய்து கார்த்திக் நண்பராக நடிக்க வைத்தார்.
அதேபோல் தளபதி, ரோஜா படத்தில் அரவிந்த்சாமி கேரக்டருக்கு என்னைத் தான் நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் சரியான வாய்ப்பு அமையாமல் போனது. ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த இடத்தில் பயங்கரமாக சொதப்பினேன். அதேசமயம் கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் ரமேஷ் அரவிந்த் கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது. அவர் வீட்டில் வைத்து என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து இதை சொன்னார். ஆனால் நடுவில் யார் பேச்சையோ கேட்டு சம்பளம் விஷயத்தில் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். அது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்” என ஆனந்த் கூறியிருப்பார்.