Cinema Rewind: என் முதல் படம் என்னன்னு தெரியுமா? – வடிவேலு சொன்ன கதை!
Actor Vadivelu Cinema : வடிவேலு தனது முதல் திரை அனுபவத்தை "என் தங்கை கல்யாணி" படத்தின் மூலம் நடந்தது பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த ஷூட்டிங்கில், ஒரு சிறிய காட்சியில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும், அதன் பின்னர் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என் ராசாவின் மனசிலே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது எனவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வடிவேலு (Actor Vadivelu) தன்னுடைய முதல் பட அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பார். அதனைப் பற்றிப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் பல பிரபலங்கள் வந்தாலும், போனாலும் நகைச்சுவை நடிகர்களாக திரையில் தோன்றியவர்கள் என்றென்றைக்கும் மக்கள் மனதில் நீடித்திருப்பார்கள். அதில் வைகைப்புயல் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலும் ஒருவர். நகைச்சுவை நடிகனாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து, ஹீரோவாக அடுத்த பரிணாமம் தொடங்கி தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பலரும் வடிவேலு 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வடிவேலு உண்மையில் திரையில் தோன்றியது பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “என் தங்கை கல்யாணி” படத்தில் தான். இந்த படம் தொடர்பாக வடிவேலு பேசியதை காணலாம்.
முதல் படத்தின் வாய்ப்பு கிடைத்த கதை
கேங்கர்ஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, “என் தங்கை கல்யாணி படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. நான் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சிறுவன் சைக்கிளில் இருக்கும் பெல்லை திருடுவது போல காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரனாக ஒரு ஆள் வேண்டும். யாரை நடிக்க வைக்கலாம் என டி.ராஜேந்தர் கூட்டத்தைப் பார்க்கிறார்.
சார் நான் வரட்டுமா என அவரிடம் கேட்டேன். எந்த ஊருயா நீ? என கேட்க, மதுரை என சொன்னேன். சரி வந்து இங்க நில்லு என கூறினார். 2 வசனம் கொடுத்தார். முடித்துவிட்டு மதுரைக்கு வந்து விட்டேன். 1987 ஆம் ஆண்டு அந்த படத்தில் நடித்தேன். அதன்பிறகு 3 ஆண்டுகள் எதுவும் வாய்ப்பு வரவில்லை. ஊரில் சென்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை சினிமாவில் பார்த்த ஊர்க்காரர்கள், நீ என்ன பண்ணிட்டு இருக்க என கேட்டு சென்னைக்கு பஸ் ஏற்றி விட்டனர். திரும்பவும் நான் சினிமாவிற்குள் வந்தேன்” என கூறியிருப்பார்.




வடிவேலுவின் வளர்ச்சி
1991 ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அனைவரும் அறிந்த நபராக வடிவேலு எண்ட்ரி கொடுத்தார். கிட்டதட்ட 2011 ஆம் ஆண்டு வரை அவரின் வளர்ச்சியை யாராலும் தடுத்த நிறுத்த முடியாத அளவுக்கு புகழ் பெற்றார். பின்னர் அரசியலுக்குள் சென்ற அவருக்கு 7 ஆண்டுகள் வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு சென்று விட்டது. இதன்பின்னர் விஜய் நடித்த மெர்சல் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக மாரீசன் படம் அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.