அஜித்தின் ஓட்டு செல்லுமா?.. கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி விசாரணை!
அஜித் முன்கூட்டியே வாக்களித்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரசிகர்கள் கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவர் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது. இருப்பினும், "நேரம் தொடங்கும் முன்பே ஒரு தனிநபரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம்?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
Tamilnadu Polls 2026: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்குப் பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் அதற்கு முன்பே தனது வாக்கைப் பதிவு செய்தது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மையூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சிப் பள்ளியில் அஜித்குமார் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுவாகத் திரைப் பிரபலங்கள் வரும்போது கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அஜித்குமார் அதிகாலையிலேயே அங்கு வரத் திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிக்க: Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!
அதிகாலையிலேயே ஆஜரான ‘தல’:
அதன்படி, காலை 6.45 மணிக்கே வெள்ளை நிற கோட்-சூட் அணிந்து, கம்பீரமான தோற்றத்தில் தனது காரில் வாக்குச்சாவடிக்கு வந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் “தல.. தல..” என உற்சாக முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
5 நிமிடம் முன்பே வாக்குப்பதிவு – நடந்தது என்ன?
சரியாக காலை 7 மணிக்குத்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், அஜித்குமார் வந்தபோது அங்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, அங்கிருந்த தேர்தல் அலுவலர்களின் சிறப்பு அனுமதியுடன், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே (6.55 மணிக்கு) அவர் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில், தமிழகத்திலேயே முதல் நபராக அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியேறினார். அவர் விரைவாக வந்து வாக்களித்துச் சென்றது மற்ற வாக்காளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விதிமீறல் புகாரும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்:
நடிகர் அஜித் முன்கூட்டியே வாக்களித்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரசிகர்கள் கூட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அவர் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது.
இருப்பினும், “நேரம் தொடங்கும் முன்பே ஒரு தனிநபரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம்?” என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது ஒரு தேர்தல் விதிமீறலா? என்பது குறித்து தற்போது தேர்தல் ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்களிடம் இதுகுறித்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!
வைரலாகும் அஜித் வாக்களித்த வீடியோ:
#WATCH | Tamil Nadu Elections 2026 | Actor S. Ajith Kumar casts his vote at a polling station in Thiruvanmiyur, Chennai. pic.twitter.com/5nmbDQnk1S
— ANI (@ANI) April 23, 2026
அஜித்குமார் வாக்குச்சாவடிக்கு வந்தது முதல் வாக்களித்துவிட்டுச் சென்றது வரையிலான காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ரசிகர்கள் அவரது “நேரந்தவறாமை” மற்றும் “ஜனநாயகக் கடமையை” பாராட்டி வந்தாலும், விதிமுறை தொடர்பான சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.