இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
Tamilnadu Assembly Election: சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரச்சாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகளின் போது சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முனைப்பு:
திமுக, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31ம் தேதி திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றில் கலந்துகொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதோடு திமுக கூட்டணிக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் தமிழகம் வருகை தந்த வாக்கு சேகரித்தனர்.
இழந்த ஆட்சியை பிடித்துவிட அதிமுக முனைப்பு:
அதிமுக. கடந்த 2021-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டு உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந் தேதி மயிலாப்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த கூட்டணிக்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தனர். இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தமிழகம் வந்து வாக்கு சேகரித்தனர்.
ஒரே தேர்தலில் ஆட்சியை பிடிக்க முனைப்பு:
இந்த தேர்தலில் புதுவரவாக, ஒரே தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி களம் இறங்கியுள்ளது விஜய்யின் தவெக. அந்த கட்சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று ரோடு ஷோ சென்றபடி வாக்கு சேகரித்தார். அவர் இந்த தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி என கூறி வருகிறார்.
வெற்றியை பார்க்கும் முனைப்பில் நாதக:
நாம் தமிழர் கட்சி தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் காரியத்தை, சீமான் துணிந்து தனது வேட்பாளர்கள் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கினார். காரைக்குடியில் சீமான் போட்டியிட்டாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
இதையும் படிக்க: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..
மாலையுடன் பரப்புரை நிறைவு:
கோடையின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரச்சாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார்.