தவெக-வினர் மீது அதிரடிப் புகார்.. அமைதி காலத்தில் டிஜிட்டல் பிரச்சாரம்.. தேர்தல் விதியை மீறியதாகச் சர்ச்சை!
Tamilnadu Assembly Election: விதிகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுள்ளது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை மதித்து அமைதி காக்கும் சூழலில், ஒரு கட்சி மட்டும் டிஜிட்டல் முறையில் மறைமுகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சமநிலையான தேர்தல் சூழலைப் பாதிக்கும் என்று புகார்தாரர்கள் கவலை.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகத் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்களிப்பதை வீடியோ எடுத்து, அதனை ஆன்லைன் பரப்புரைக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஆதி கேசவன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த தேவசகாயம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
முக்கியக் குற்றச்சாட்டுகள்:
தேர்தல் விதிமுறைப்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எந்த ஒரு பிரச்சாரமும் செய்யக்கூடாது. ஆனால், தவெக சார்பில் ‘ஏப்ரல் 22 – பிக்கஸ்ட் ஆன்லைன் பொலிட்டிகல் கேம்பைன்’ என்ற பெயரில் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RP Act 1951) பிரிவு 126-க்கு எதிரானது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு விதி மீறல்: புதுச்சேரியில் வாக்குப்பதிவின் போது சிலர் தவெக-விற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
2 ஆண்டு சிறை தண்டனை எச்சரிக்கை:
வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுள்ளது.
மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை மதித்து அமைதி காக்கும் சூழலில், ஒரு கட்சி மட்டும் டிஜிட்டல் முறையில் மறைமுகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சமநிலையான தேர்தல் சூழலைப் பாதிக்கும் என்று புகார்தாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை:
“தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அறிவிப்பு வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் நோக்கத்துடன் அமைதி காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சினிமா, தொலைக்காட்சி, இணையவழி போஸ்டர்கள் என எந்தத் தளத்திலும் இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, இந்த டிஜிட்டல் கேம்பைனுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என புகார்தாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
இதற்கிடையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.