நாகர்கோவில், ஏப்ரல் 15, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அதில் முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று நாகர்கோவிலில் ரோட் ஷோ மேற்கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அந்த வகையில், இன்று நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வந்திருந்தார்.
மேலும் படிக்க: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
நாகர்கோவிலில் ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் மோடி:
இதற்காக, டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் வந்தார். அதனைத் தொடர்ந்து, மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வேப்பமூடு சந்திப்பிற்கு காரில் சென்றார். அங்கு மாலை 4.30 மணியளவில், வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக தலைவர் கே. நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதில், “நாகர்கோவிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்துடன் இருந்தது. திமுகவின் தவறான ஆட்சியையும் ஊழலையும் தமிழகம் இனி மேலும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்திற்கு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கும்” என தெரிவித்தார்.
மேலும், அந்த சாலைப் பேரணியில் இருந்து ஒரு சிறப்பு தருணத்தைக் கொண்ட குறுந்தகடு (வீடியோ) ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.