திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி!
Pm Modi visit Thiruparankundram: ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்க வந்த நிலையில், இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் அமல்படுத்தவில்லை. இதனால், திருப்பரங்குன்றத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்பிக்கள் இம்பீச்மென்ட் (குற்றச்சாட்டு) கொண்டு வந்தனர். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இடையே விவாதமும் நடைபெற்றது. இதன் மூலம் நாடு முழுவதும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் தீபத்தூண் விவகாரம் கவனம் பெற்றது.
திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்த பிரதமர் மோடி
இதே போல, டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இதனால், அப்போதே பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வருகை தருவார் என்று பேசப்பட்டது. அதன்படி, மதுரையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தார்.
மேலும் படிக்க: மதுரையில் ரூ.4,400 கோடி திட்டப் பணிகள் – துவங்கி வைத்த பிரதமர் மோடி




15 நிமிடம் மனம் உருகி தரிசனம் செய்த பிரதமர் மோடி
வெள்ளை வேஷ்டி சட்டை, காவி சால்வை அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு ஸ்தானிக சிவாச்சாரியார்கள் ராஜா சந்திரசேகரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூல ஸ்தானத்திற்கு சென்று முருகனை மனம் உருகி சுமார் 15 நிமிடம் வழிபட்டார். அப்போது, பிரதமர் மோடி பெயரில் பட்டர்கள் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வந்த முதல் பிரதமர் மோடி
பின்னர், கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து சுவாமியை வணங்கினார். அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இதன் மூலம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்ற பெயரை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை