AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரையில் இன்று பிரசாரம்.. சென்னை வந்த பிரதமர் மோடி.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

PM modi arrives in Chennai: மதுரை விமான நிலையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மாலை 4.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.

மதுரையில் இன்று பிரசாரம்.. சென்னை வந்த பிரதமர் மோடி.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..
பிரதமர் மோடி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Mar 2026 07:34 AM IST

சென்னை, மார்ச் 01: மதுரையில் இன்று நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி முழு வீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 2வது முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நேற்று இரவு சென்னை வந்தார். குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.45 மணிக்கு வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி, அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் படிக்க: மக்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும்… திமுக மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு!

மோடிக்கு உற்சாக வரவேற்பு:

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையம் அருகே சாலையில் குவிந்திருந்த பாஜக, அதிமுக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள, தாளம் முழங்க வெற்றி கோஷம் எழுப்பினர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். வழியெங்கும் சாலையில் குவிந்திருந்த தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிரதமரின் பயணத் திட்டம்:

பிரதமர் மோடி, சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலமாக புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்திற்கு மதியம் 1.55 மணிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மதுரை விமான நிலைய வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ரயில், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

ரயில் நிலையங்கள் திறப்பு:

குறிப்பாக தென்மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு சாலை பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்திய ரயில்வே மூலம் நாடு முழுவதும் 1,300 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் பொம்படி, மொரப்பூர், திருவாரூர், பொள்ளாச்சி, காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 8 ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4வது வழித்தடம் என ரூ.378 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த ரயில் நிலையங்களை இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம்:

பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மாலை 4.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். இதற்காக மண்டேலா நகரில் சுமார் 150 ஏக்கர் இடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு:

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணி கட்சிகளான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!

கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்ட குழுக்களாக மோப்பநாய் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொண்டர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Follow Us