Meyyanathan Siva V Tamil Nadu Election: ஆலங்குடி தொகுதியை தக்க வைத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா சிவ வீ.மெய்யநாதன்!
Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதுடன், அமைச்சரவையில் இடம் பெற்றதுடன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம் எல் ஏ பதவியை தக்க வைத்துக்கொள்வாரா சிவ வீ.மெய்யநாதன்.
தமிழகத்தில் திமுகவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சிவ வீ. மெய்யநாதன். இவர், கடந்த 1969- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9- ஆம் தேதி வீரமுத்து என்பவருக்கு மகனாக பிறந்தார். அரசியல் ஆர்வம் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த சிவ வி. மையநாதன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக 2011 முதல் 2016 வரை பணிபுரிந்தார். பின்னர் 2016 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். தனது முதல் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக தேர்தல் பணி ஆற்றிய மெய்யநாதன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். தனக்கு கிடைத்த மெய்யநாதனுக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் முறை அமைச்சரவையில் இடம் பெற்ற மெய்யநாதன்
அதன்படி, அவர் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நிலையில் மீண்டும் தனது வெற்றியை பறைசாற்றியதுடன், வெற்றியை உறுதி செய்து கொண்டார். அப்போது, அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், 2022- ஆம் ஆண்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
மேலும் படிக்க: R.P.Udayakumar Tamil Nadu Election: திருமங்கலம் தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பாரா ஆர்.பி.உதயகுமார்!




பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக…
இதனால், சிவ மெய்யநாதன் கவனித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. பின்னர், 2024- ஆம் ஆண்டு மீண்டும் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதுடன், பல்வேறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இலாகா தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டது. சிவ மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இலாகா மாற்றி வழங்கப்பட்டு தொடர்ந்து வருகிறார்.
எம்எல்ஏ-அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட மைய நாதன் அதிமுக வேட்பாளர் ஞான கலைச் செல்வனை வீழ்த்தி 72,992 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்ட மெய்யநாதன் அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேலை வீழ்த்தி 87 ஆயிரத்து 935 வாக்குகள் பெற்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிவ வி. மெய்யநாதன் மீண்டும் திமுக சார்பில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களை போல, இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்று கட்சி வட்டாரத்திலும், தொகுதி வட்டாரத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.