சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி.. பங்கேற்காவிடில் கடும் நடவடிக்கை!
Polling Station Officials: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணி புரிய உள்ள 19,594 வாக்காளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 978 பகுதிகளில் 4,079 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற மார்ச் 28- ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அதன்படி, தண்டையார்பேட்டையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, கொளத்தூர் சென்னை உயர்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஐ. சி. எஃப். உயர்நிலைப்பள்ளி, திரு. வி. க. நகர் சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எழும்பூர் சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
இதே போல, ராயபுரம் புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி, துறைமுகம் பாரதி அரசு கலைக் கல்லூரி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி என். கே. டி. தேசிய பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆயிரம் விளக்கு சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர் டி. ஜி. வைஷ்ணவா கலைக் கல்லூரி, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, டி. நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி சென்னை உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..




வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை
இந்த பயிற்சி வகுப்புகளுக்கான உத்தரவுகள் நேரடியாகவும், எஸ். எம். எஸ். வாயிலாகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 28- ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தி விதிகளின் அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள்
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள துறைகளின் ஊழியர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமாக பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னரே, அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்காகவே, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?