சென்னை, மார்ச் 28, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏற்கனவே உள்ள மூன்று அமைச்சர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின்:
இந்த நிலையில், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார். அதேபோல், காட்பாடியில் துரைமுருகன், கோவையில் செந்தில் பாலாஜி, போடியில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க: பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்
திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியவர்களுக்கு வாய்ப்பு:
வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கழகப் பொதுச் செயலாளருக்கு நன்றி. அந்த தொகுதி மக்கள் மீண்டும் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை திமுகவில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே அதிகமானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: திருச்சியில் ஏப்ரல் 3 முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..
நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்படவில்லை:
மேலும், NEET தேர்வு ரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “2024 மக்களவைத் தேர்தலின்போது இந்திய தேசிய காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் NEET தேர்வை ரத்து செய்வோம் என ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தார். தமிழக அரசு சார்பில் இரண்டு முறை NEET தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக ஆட்சியில் இருப்பதால்தான் அதை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்தியத்தில் பாஜக அகற்றப்பட்டு, தமிழகத்தில் மீண்டும் சுயமரியாதை இயக்க ஆட்சி அமைந்தால் NEET தேர்வு ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.