சென்னை, ஏப்ரல் 22, 2026: 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் வாக்குப்பதிவு நாள் விழிப்புணர்வு மடல் இது” எனத் தொடங்குகிறார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன் தந்துள்ளன. அதே நேரத்தில், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன என்ற உணர்வு மக்களிடையே உள்ளது.
தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:
இதனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது. மக்கள் நம்முடன் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரில் தொடங்கிய தனது தேர்தல் பிரச்சாரம், கொளத்தூர் தொகுதியில் நிறைவடைந்ததாகவும், மாநிலம் முழுவதும் மக்கள் நேரடியாக சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். “விடியல் பயணம்”, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”, “காலை உணவுத் திட்டம்”, “நான் முதல்வன்” உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தவெக-வினர் மீது அதிரடிப் புகார்.. அமைதி காலத்தில் டிஜிட்டல் பிரச்சாரம்.. தேர்தல் விதியை மீறியதாகச் சர்ச்சை!
மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ₹2000 உரிமைத் தொகை, இல்லத்தரசிகளுக்கான கூப்பன், விவசாயிகளுக்கான உதவித் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவன்று விழிப்புடன் இருக்க வேண்டும்:
வாக்குப்பதிவு நாளில் கழகத்தினர் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், பூத் ஏஜெண்ட்கள் முன்கூட்டியே வாக்குச்சாவடிக்கு சென்று பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll), EVM, VVPAT சரிபார்ப்பு, 17C படிவம் உள்ளிட்ட அனைத்தையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர்களே.. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி?.. முழு விவரம்!!
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், ஆதரவாளர்களின் வாக்கு பதிவு உறுதி செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு முடிவில் தேவையான ஆவணங்களைப் பெற்றுச் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளை காக்கவும் இந்தத் தேர்தல் முக்கியமானது. விழிப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.