பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்
Fuel Price Hike Warning : மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், “இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்தால், எரிபொருள் விலை உயர்வை அரசு ஒருகட்டத்தில் மக்களிடம் மாற்றித் தர வேண்டிய நிலை உருவாகும் என்று கூறினார். இந்த மாநாட்டை சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஸ்விஸ் தேசிய வங்கி இணைந்து நடத்தின.
பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு
இந்த நிகழ்வில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு தற்போது மிகப்பெரிய சவாலாக ஹார்முஸ் நீரிணை பிரச்சனை உருவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா, வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படும் எந்த பதற்றமும் இந்திய சந்தையை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!




ஹார்முஸ் நீரிணை வழியாக உலகளவில் பெருமளவு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இந்தப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதோடு, போக்குவரத்து, உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளிலும் செலவுகள் உயரும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், பணவீக்கம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பிலும் அழுத்தம் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது வரை மத்திய அரசும், அரசு எண்ணெய் நிறுவனங்களும் இந்த கூடுதல் செலவினை தங்களே ஏற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் எரிபொருள் மீதான உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள முழுமையான விலை உயர்வு இன்னும் சில்லறை விற்பனையில் எதிரொலிக்கவில்லை என்றார்.
இதையும் படிக்க : தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?
ஆனால் சில எரிபொருள் சார்ந்த பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர், தொழிற்துறை டீசல், 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வழங்கப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.993 வரை உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.