ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?
Government Withdrawing Low Denomination Notes | இந்திய ரூபாய் நோட்டுக்கள் ரூ.10, ரூ.20, ரூ.50 என பல்வேறு வகைகளில் உள்ளன. இந்த நிலையில், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்ப பெற உள்ளதாகவும், ஜூலை மாதம் முதல் அவை செல்லாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுக்களை மத்திய அரசு திரும்ப பெற உள்ளதாகவும், அதன் காரணமாக ஜூலை 01, 2026 முதல் அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுக்கள் குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல், பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்து வெளியாகியுள்ள இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் திரும்பப்பெறப்படுகிறதா?
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank Of Maharashtra) இலட்சினையுடன் சமூக ஊடகங்களில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 ஆகிய நோட்டுக்கள் ஜூலை 01, 2026 முதல் செல்லாது என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதல் வைரலாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடைபெற கூடுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் உண்மையாகவே ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI – Reserve Bank Of India) அத்தகைய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதா என்பது தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!




திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த மத்திய அரசு
இந்திய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக வைரலாகி வரும் அந்த கடிதம் முற்றிலும் பொய்யானது என்றும், அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் அரசு கூறியுள்ளது. குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை நீக்குவதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பிஐபி (PIB – Press Information Bureau) அமைப்பு உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : Gold : 2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?
விளக்கம் அளித்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் இணையத்தில் பரவி வரும் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது பெயரில் வைரலாகி வரும் தகவல் முழுவதும் பொய்யானது என்றும் முகாந்திரம் இல்லாதது என்றும் அந்த வங்கி கூறியுள்ளது. இத்தகைய வதந்திகளை நம்பவோ, பிறருக்கு பகிரவோ வேண்டாம் என்று அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.