புதிய வாடகை விதிகள் 2025: மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? முன் பணம் குறையுமா?
Year Ender 2025 : புதிய வாடகை விதிகள் 2025 ஆனது , அதிக முன்பணம் செலுத்த வேண்டிய அழுத்தத்தை குறைத்து, வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சேமிப்பு, முதலீடு, அவசரச் செலவுகளுக்கு உதவுகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நகர்ப்புற இந்தியாவில் வீடு வாடகைக்கு (Rental House) எடுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. பெரும் தொகையை முன்பணமாக கட்டி, பல ஆண்டுகள் அது முடங்கிக் கிடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலைக்கு மாற்றமாக, மத்திய அரசால் இந்த 2025 ஆண்டு புதிய வாடகை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் வேலை போன்ற சூழ்நிலை காரணமாக நகர்புறங்களில் குடியேறி வருகின்றனர். அவர்களுக்கு வாடகை வீடுகள் பெரிதும் கைகொடுக்கின்றன. இந்த நிலையில் பெரு நகரங்களில் லட்சகணக்கில் வாடகை வீடுகளுக்கு முன்பணம் வசூலிக்கப்படுகின்றன.
நகரங்களை பொறுத்து வாடகை முன்பணம் எவ்வாறு மாறுபடுகிறது?
இந்த நிலையில், நிதி நிபுணர் டாபஸ் சக்கரவர்த்தி தனது லிங்கிட்இன் பதிவில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாடகை முன்பணம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பெங்களூருவில் ரூ.25,000 வாடகைக்கு ரூ.1.5 முதல் ரூ.2.5 லட்சம் வரை முன்பணம் கேட்கப்படுகிறது. சென்னையில் 5 முதல் 6 மாத வாடகையாக சுமார் ரூ.1.25 முதல் 1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. மும்பையில் 2 முதல் 3 மாத வாடகையாக ரூ.50,000 முதல் 75,000 வரை/gcd, டெல்லியில் 1 முதல் 2 மாத வாடகையாக ரூ.25,000 முதல் 50,000 வரை முன்பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்கிறார்.
இதையும் படிக்க : Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு




இந்த விவரங்கள், முன்பணம் என்பது வருமானம் இல்லாமல் முடங்கும் நிலையில் உள்ளது. அந்த தொகை சரியாக முதலீடு செய்யப்பட்டிருந்தால், வட்டி வருமானம், அவசர செலவுகள் அல்லது சேமிப்புகளுக்கு உதவியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வாடகை வீடுகள் அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், நகர்ப்புற இந்தியாவில் 28 சதவீதம் பேர் மட்டுமே வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இது சுமார் 2.73 கோடி குடும்பங்களை குறிக்கிறது. பெரும்பாலும் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் குடும்பங்களே இந்தப் பிரிவில் அதிகம் உள்ளனர்.
புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன?
இந்த 2025 ஆம் ஆண்டு புதிய வாடகை விதிகளின்படி, குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சம் 2 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக கேட்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக இடங்களுக்கு அதிகபட்சம் 6 மாத வாடகை முன்பணமாக வசூலிக்கலாம். இதுவரை வீட்டு உரிமையாளர்கள் விருப்பப்படி முன்பணம் கேட்ட நிலையில், இந்த விதி வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கிறது.
விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இந்த நிலையில், முன்பணத்தில் செலுத்தப்படும் பணம் குறையும் என்பதால் மாதாந்திர முதலீடுகளை தொடர, அவசர செலவுகளை சமாளிக்க மற்றும் சேமிப்புகளை அதிகரிக்க வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க : Year Ender 2025: இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணம் என்ன? – 2026ல் எப்படி இருக்கும்?
இதுவரை பல இடங்களில் கையெழுத்து ஒப்பந்தங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத வாடகை ஒப்பந்தங்கள் காரணமாக, வாடகையாளர்கள் சட்ட சிக்கல்களில் சிக்கியுள்ளனர். புதிய விதிகள் அமலுக்கு வந்தால், வாடகை ஒப்பந்தங்கள் தெளிவாகும், நடைமுறைகள் வெளிப்படையாகும், சட்ட பாதுகாப்பும் அதிகரிக்கும். இந்த புதிய வாடகை விதிகள் வெறும் ஆவணங்களை மட்டும் சரி செய்யவில்லை. பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிப்பவர்களின் பணத்தை உறிஞ்சிய ஒரு அமைப்பையே திருத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக வாடகை முறை, மக்கள் எங்கு வாழ வேண்டும், அலுவலகத்திலிருந்து எவ்வளவு தூரம் இருக்க வேண்டும், முதலீடு செய்ய முடியுமா என்பதையும் தீர்மானித்து வந்தது. ஆனால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தால், வீடும் நிதி பாதுகாப்பும் சமநிலையில் இருக்க வாடகையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.