வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!
Kisan Credit Card Scheme | மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் கிரெடிட் கார்டு. இந்த திட்டத்தில் விவசாயிகள் பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும்.
இந்தியாவின் முக்கிய தூணாக உள்ள விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறனர். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card). வேளாண் உற்பத்திக்கு தாராளமாக பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கான வரப்பிரசாதமாக உள்ள இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவசாயிகளுக்கான அட்டகாசமான கிசான் கிரெட் கார்டு திட்டம்
இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது இந்த திட்டத்தில் ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, கடனை பெற்ற விவசாயி அதனை முறையாக திருப்பி செலுத்தும் பட்சத்தில் வட்டி விகிதம் வெறும் 4 சதவீதமாக குறைக்கப்படும். பயிர் சாகுபடி, பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்யும் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று பயனடையலாம்.
இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறையும் வட்டி
இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடனை முறையாகவும், உரிய நேரத்திலும் திருப்பி செலுத்தும் பட்சத்தில் அரசு வட்டி மானியம் வழங்கும். இதன் மூலம் 7 சதவீத வட்டிக்கு நீங்கள் வாங்கும் கடன் வெறும் 4 சதவீதமாக குறையும். மற்ற கடன்களுக்கு பிணையமாக ஏதேனும் ஒன்றின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் பிணையம் எதுவுமின்றி ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



