இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!
Sri Lanka Refugees : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் அகதிகள் இலங்கை திரும்பி செல்வதற்கு அந்த நாட்டின் அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் எந்த இடையூறும் இன்றி இலங்கை அகதிகள் தாயகம் திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் அகதிகள் முகாம் அமைத்துக் கொடுத்துள்ளனர். இங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு இலங்கை அரசு புதிய சிறப்பு ஏற்பாட்டை உருவாக்கி உள்ளது. இதில், முறையான பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் போர்க்காலத்தின் போது, இந்தியா வந்தவர்கள் மற்றும் உரிய சோதனைகளுக்கு பிறகு தன்னார்வமாக நாடு திரும்புவதற்கு இந்த நடைமுறை வழி வகுக்கும். கடந்த 1983- ஆம் ஆண்டு ஏற்பட்ட இன மோதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் நடைபெற்ற போரானது சுமார் 30 ஆண்டுகளுக்கு நீடித்தது.
தமிழகத்தில் 90 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசிப்பு
கடந்த 2009- ஆம் ஆண்டு இந்த போர் இறுதிக் கட்டத்தை எட்டியது. 2002- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை சுமார் 18 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர். மீதமுள்ள சுமார் 90 ஆயிரம் பேர் தமிழகத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நடைமுறையின் படி, முதலில் இலங்கை தூதரகங்கள் வாயிலாக அகதிகளின் அடையாளம் மற்றும் இலங்கை குடியுரிமை உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இலங்கை நாட்டின் அரசு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும்.
மேலும் படிக்க: நேபாளத்தில் மீண்டும் தீவிரமடையும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!




கடும் குற்றங்களில் தொடர்பு இல்லாதவர்கள்
இதில், கொலை, தேச துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்பு இல்லாதவர்கள் தேவையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்படும். அதன் அடிப்படையில், சட்டபூர்வமாக அவர்கள் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவானது இலங்கை போருக்கு பின்னர் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இதில், குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகிறது.
கைது நடவடிக்கை இன்றி இலங்கை பயணம்
தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையின் காரணமாக அந்த சிக்கல்கள் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 46 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் எந்த விதமான கைது நடவடிக்கைகளும் இல்லாமல் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: நேபாளத்தில் இடிபாடுகளிலிருந்து தப்பிய 97 வயது மூதாட்டி.. ஓடோடி சென்று உதவும் இந்தியக் கரங்கள்.. தொடரும் மீட்புப் போர்!!