AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாளத்தில் மீண்டும் தீவிரமடையும் வெள்ள அபாயம்.. கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

Nepal Fresh Flood Alert: நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவு (Glacier Collapse) காரணமாக ஏற்பட்ட திடீர் கனவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 600-ஐக் கடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் பொங்கி வழியும் பேரழிவு வெள்ளத்தால் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Aug 2026 09:23 AM IST

அண்டை நாடான நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இடையே, இமயமலைப் பகுதியின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத பனிப்பாறை சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பேராபத்து உருவாகியுள்ளது. இமயமலையின் மிக உயர் பகுதியில் பனிப்பாறை உடைந்து லெண்டே கோலா நதியில் விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகள் வழியே சீறிப்பாய்ந்து கரையோர கிராமங்களை உருத்தெரியாமல் அழித்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு.. பயணத்தின் திட்டம் என்ன?

திடீர் பனிப்பாறை சரிவும் நில அதிர்வு குழப்பமும்:

முதலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்  மற்றும் சர்வதேச வல்லுநர்கள், 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த மாபெரும் பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்ததே இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என உறுதி செய்துள்ளனர். வெறும் 30 நிமிடங்களில் ஆற்று நீர்மட்டம் 9 மீட்டர் (30 அடி) வரை உயர்ந்ததால், கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நீர்மின் நிலையங்கள், பாலங்கள் மற்றும் பல அடுக்குக் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியர்கள் மீட்பும் தொடரும் தேடுதல் வேட்டையும்:

இந்த திடீர் பேரழிவில் நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களும் சிக்கியுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மீட்புக் குழுவினரின் தீவிர நடவடிக்கையால் இதுவரை பல இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இருப்பினும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட பல இந்தியர்களின் நிலைமை குறித்து இன்னும் தகவல் கிடைக்காததால் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தொலைதூர மலைப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் போராடி வருகின்றனர்.

உ.பி, பீகாருக்கு அவசர எச்சரிக்கை:

நேபாளத்திலிருந்து பாயும் நதிகளில் நீர்வரத்து கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், இந்தியாவின் எல்லை மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு அவசர வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பீகாரின் கண்டக் ஆற்றில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியதால், வல்மீகி நகர் அணைக்கட்டின் அனைத்து 36 மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு சாம்பாரான் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் வசதிப்போரை உடனடியாக வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், குஷிநகர் ஆகிய எல்லை மாவட்ட நிர்வாகங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Also Read: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..

பேரிடர் மீட்புக் குழுவின் தீவிர நடவடிக்கை:

நேபாள ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹெலிகாப்டர்கள் மூலமே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வான்வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. இமயமலைப் பகுதியில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குத் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

Follow Us