காட்ஸில்லா எல் நினோ.. கடுமையான வெயில், வெப்ப அலை.. இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
இந்தியாவைப் பொறுத்தவரை, வலுவான எல் நினோ பொதுவாக இயல்பை விட அதிக வெப்பநிலை மற்றும் அடிக்கடி வெப்ப அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிகழ்வு 2027ஆம் ஆண்டிலும் நீடித்தால், புதிய வெப்பநிலை சாதனைகள் பதிவாகுவதோடு, தென்மேற்கு பருவமழையையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 7, 2026: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு, இதுவரை பதிவானவற்றில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மாறக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிகழ்வு 2027ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான வெப்பம், வறட்சி, வெள்ளம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்ஸில்லா எல் நினோ – தாக்கம் எப்படி இருக்கும்?
சில ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை “காட்ஸில்லா எல் நினோ” அல்லது “சூப்பர் எல் நினோ” என்று குறிப்பிடுகின்றனர். தற்போது உருவாகி வரும் எல் நினோ, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் காலநிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த எல் நினோ “மிகவும் வலுவான” நிலையை அடைய 81 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இது, நம்பகமான பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பசிபிக் பெருங்கடலில் உருவானது சூப்பர் எல் நினோ.. இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
தற்போதைய கணிப்புகள் தொடர்ந்தால், 1982-83, 1997-98 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் பதிவான மிகப் பெரிய எல் நினோ நிகழ்வுகளின் வலிமையையும் இது மிஞ்சக்கூடும் என்று சில காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றிலேயே மிக வலுவான எல் நினோ
பெர்க்லி எர்த் (Berkeley Earth) காலநிலை விஞ்ஞானி ஜெக் ஹவுஸ்ஃபாதர் (Zeke Hausfather), சமீபத்திய கணினி மாதிரி கணிப்புகள் “ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளன” என்றும், சில மாதிரிகள் நவீன கால அளவீட்டு வரலாற்றிலேயே மிக வலுவான எல் நினோ நிகழ்வைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சில வானிலை ஆய்வாளர்கள், இந்த எல் நினோ கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர். எனினும், இது தற்போது ஊகத்தின் அடிப்படையிலான கருத்தாகவே உள்ளது. ஏனெனில், நேரடி வானிலை அளவீட்டு பதிவுகள் கடந்த சுமார் 150 ஆண்டுகளுக்கே மட்டுமே கிடைக்கின்றன. அதனால், பழைய காலநிலை ஆதாரங்கள் மற்றும் வரலாற்று மறுகட்டமைப்புகளின் அடிப்படையில் மட்டுமே ஒப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் இயற்கை காலநிலை நிகழ்வே எல் நினோ ஆகும். இது உலகளாவிய காற்றோட்ட அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.
2027ல் அதிகப்படியான வெப்பநிலை:
தற்போதைய கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில், 2027ஆம் ஆண்டு உலகளவில் இதுவரை பதிவான ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அதிகரித்து வரும் பசுங்குடில் வாயுக்களின் தாக்கத்துடன் எல் நினோவின் வெப்பமயமாதல் விளைவும் இணைவதே இதற்கு காரணமாகும்.
எல் நினோ உச்சநிலையை அடைந்த சில மாதங்களுக்குப் பிறகே அதன் முழுமையான தாக்கம் உலக வெப்பநிலையில் பிரதிபலிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் மாறுபடும். கனடாவில் மிதமான குளிர்காலம் நிலவக்கூடும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான மழை மற்றும் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம். டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட தென் அமெரிக்க மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை மற்றும் குளிர்கால புயல் அபாயம் உருவாக வாய்ப்புள்ளது.
பாதிக்கப்படும் தென்மேற்கு பருவமழை:
இந்தியாவைப் பொறுத்தவரை, வலுவான எல் நினோ பொதுவாக இயல்பை விட அதிக வெப்பநிலை மற்றும் அடிக்கடி வெப்ப அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிகழ்வு 2027ஆம் ஆண்டிலும் நீடித்தால், புதிய வெப்பநிலை சாதனைகள் பதிவாகுவதோடு, தென்மேற்கு பருவமழையையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மழைப்பொழிவின் அளவு இந்தியப் பெருங்கடல் டைப்போல் (Indian Ocean Dipole) போன்ற பிற காலநிலை காரணிகளையும் சார்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபை, வலுப்பெற்று வரும் எல் நினோ “ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பூமியில் மேலும் எரிபொருள் சேர்ப்பது போன்றது” என்று எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.