மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் படுகொலை.. சென்னையில் பயங்கரம்..
யாசனியும் அவரது தோழியும் ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது, கொதிப்பில் இருந்த எதிர்தரப்பினர் திமுக கொடி கட்டிய சொகுசு காரை மிக அதிவேகமாக இயக்கி, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த யாசனியின் வாகனத்தின் மீது பின்தொடர்ந்து சென்று பயங்கரமாக மோதியுள்ளனர்.
சென்னை, மே 31: சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி பாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவத்தில் உயிரிழந்த பெண், விழுப்புரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ‘யாசனி’ (18) என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாசனிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தோழியைச் சந்திப்பதற்காக யாசனி விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
இதையும் படிக்க: தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!
நடனமாடும் இடத்தில் வெடித்த தகராறு:
நேற்று இரவு யாசனி தனது தோழி மற்றும் நண்பர்களுடன் இணைந்து கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி பாருக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு, விடுதியின் நடனமாடும் இடத்தில் அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைக்கலப்பாகவும், அடிதடியாகவும் மாறியுள்ளது. உடனே பாரில் இருந்த பவுன்சர்கள் தலையிட்டு, மோதலில் ஏற்பட்ட இருதரப்பினரையும் பாரை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். பாருக்கு வெளியேயும், சாலையிலும் அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டதால், பவுன்சர்கள் பாரின் கதவுகளை மூடியுள்ளனர்.
பழிவாங்கப் பாய்ந்த திமுக கொடி கார்:
பாரை விட்டு வெளியேறிய பிறகும் ஆத்திரம் அடங்காத எதிர்தரப்பினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கட்டிய சொகுசு கார் ஒன்றில் ஏறியுள்ளனர். யாசனியும் அவரது தோழியும் ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது, கொதிப்பில் இருந்த எதிர்தரப்பினர் காரை மிக அதிவேகமாக இயக்கி, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த யாசனியின் வாகனத்தின் மீது பின்தொடர்ந்து சென்று பயங்கரமாக மோதியுள்ளனர். இந்தக் கொடூரமான தாக்குதலில் யாசனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அவரது தோழி பலத்த காயமடைந்து சுயநினைவற்ற நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் விசாரணை:
தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீஸார், உயிரிழந்த யாசனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் திரட்டி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அந்த திமுக கொடி கட்டிய கார் ‘சுமன் சக்திவேல்’ என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: “உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!
விதிமீறல் குறித்து எழும் கேள்விகள்:
தமிழ்நாட்டில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பார்களில் மது வழங்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்தின் கடுமையான விதிகள் நடைமுறையில் உள்ளன. அவ்வாறு இருக்கையில், விதிமுறைகளை மீறி 18 வயதே ஆன யாசனி மற்றும் அவரது நண்பர்களை இந்த நட்சத்திர விடுதி பார் நிர்வாகம் எவ்வாறு உள்ளே அனுமதித்தது என்பது குறித்தும் போலீஸார் தனியாக விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.