கிணற்றில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம்.. கல்லைக் கட்டி வீசிய கொலையாளிகள்.. கோவையில் பயங்கரம்!!
இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அந்தப் பகுதியில் சேதமடைந்த நிலையில் 'ஸ்விப்ட்' கார் ஒன்று நின்றதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். அந்த காரின் மீது சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, ஜுன் 17: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, தனியார் தோட்டத்து கிணறு ஒன்றில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கோப்புராசிபுரம் என்ற கிராமத்தில், சாலையோரத் தோட்டப் பகுதியில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையும் படிக்க: ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறை உதவியோடு அந்த மூட்டையை மேலே மீட்டனர். மூட்டையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அடித்துக் கொலை செய்து கல்லை கட்டிய கொடூரம்:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மூன்று நாட்களுக்கு முன்பே அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மேலே மிதந்து வந்துவிடக் கூடாது என்பதற்காக, கொலையாளிகள் உடலுடன் கனமான கல்லை வைத்துக் கட்டி, சாக்கு மூட்டையில் அடைத்துக் கிணற்றுக்குள் வீசியுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது புழு பிடித்த நிலையில் மிகவும் சிதைந்து காணப்படுகிறது.
மர்ம கார் குறித்து போலீஸ் விசாரணை:
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் இருப்பதால், கொலையாளிகளைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அந்தப் பகுதியில் சேதமடைந்த நிலையில் ‘ஸ்விப்ட்’ கார் ஒன்று நின்றதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். அந்த காரின் மீது சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ‘நகையே இல்லாமல் அடகு’.. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. பகீர் தகவல்!!
மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் அண்மைக்காலமாகப் பெண்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா அல்லது கடத்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இக்கொடூரச் சம்பவம் அன்னூர் பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.