மீண்டும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான உள்நுழைவுக் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இக்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
சென்னை, ஜுன் 12: ஆம்னி பேருந்துகளுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளரை நேரில் சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் அன்பழகன், தங்களது முக்கிய கோரிக்கைகள் மற்றும் தற்போதைய போக்குவரத்து நிலை குறித்து விரிவாகப் பேசினார்.
மேலும் படிக்க: கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!
கிளாம்பாக்கத்தால் போக்குவரத்து நெரிசல்:
தமிழக அரசிடம் நாங்கள் முன்வைக்கும் மிக முக்கிய கோரிக்கை, கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்பதுதான். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தற்போது முற்றிலும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது.
முன்பு ஒரே ஒரு ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள், இப்போது கிளாம்பாக்கம் வரை செல்வதற்காக 40 தனித்தனி கார்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான உள்நுழைவுக் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இக்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
ஆன்லைனில் பேன்சி எண்கள்:
வாகனங்களுக்கு பேன்சி எண் வழங்கும் நடைமுறையை மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பேன்சி எண்களுக்கு விண்ணப்பிக்கவும், விரைவாக எண்களை வாங்கவும் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை இடைத்தரகர்களுக்கு செலவாகும். ஆனால் இப்போது பேன்சி எண்களுக்காக விண்ணப்பிக்கும்போது இடைத்தரகர்கள் எந்தவித கட்டணமும் பெறுவதில்லை.
கட்டண விவகாரமும் தனி பெர்மிட் கோரிக்கையும்:
கடந்த 2023-ம் ஆண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்களை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.21 வரை உயர்ந்துள்ள போதிலும், பயணிகள் நலன் கருதி 2023-ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படியே தற்போதும் வசூலித்து வருகிறோம். உதாரணமாக, விசேஷ நாட்கள் இல்லாத சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பேருந்துகளில் ரூ.780 வரை வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!
எனவே, ஆம்னி பேருந்துகளுக்கென அரசு தனியாக பெர்மிட் வழங்க வேண்டும். இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்குத் தனி பெர்மிட் வழங்கப்பட்டால் மட்டுமே, அவற்றின் கட்டண நிர்ணயத்தை அரசாங்கத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தவோ அல்லது முறைப்படுத்தவோ முடியும் என்று அவர் கூறினார்.