“திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிவிட்டு புதிய ஆட்சி மலர்ந்துள்ளது”.. முதல்வர் விஜய்க்கு வைகோ பாராட்டு!
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கோட்டைகளைத் தகர்த்துவிட்டு புதிய ஆட்சி மலர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசு மீது கூட்டணிக் கட்சிகளே சேற்ற வாரி இறைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
சென்னை, ஜூலை 18: தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அண்மைக்கால பேச்சு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது புதிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்து வரும் வேளையில், வைகோ மேடையில் உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சருக்கு ஆதரவாகவும், திராவிடப் பாரம்பரிய இருபெரும் கட்சிகளைச் சாடியும் உரை நிகழ்த்தியுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் அசைக்க முடியாத பிம்பத்தை உடைத்து, தற்போதைய ஆட்சி உருவெடுத்துள்ளதை அவர் தனது உரையில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
இருபெரும் பிம்பங்களின் வீழ்ச்சி:
தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் குறித்து வைகோ மேடையில் பேசுகையில், திமுக, அதிமுக ஆகிய இரண்டும் சாதாரண இயக்கங்கள் அல்ல; கோடிக்கணக்கான தொண்டர்களையும் மக்களையும் தங்களின் வசம் வைத்துள்ள மாபெரும் சக்திகள். இவர்களைத் தமிழக அரசியலில் இருந்து யாராலும் அசைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்றே அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், யாராலும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, அந்த இருபெரும் கட்சிகளின் கோட்டையைத் தகர்த்து, தலைகீழாக மாற்றி, தவிடுபொடியாக்கி விட்டு என் தம்பி, என் சகோதரர் முதலமைச்சர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த வரலாற்று மாற்றத்தை யாராலும் மறுக்க முடியாது.
அன்று மௌனம் காத்தது ஏன்?
அண்மைக் காலமாக தமிழக அரசின் மீது எழுப்பப்படும் நிர்வாக ரீதியான புகார்கள் மற்றும் விமர்சனங்களுக்கு வைகோ தனது உரையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 15 முதல் 20 நாட்களாக முதலமைச்சர் விஜய் மீதும், இந்த புதிய அரசு மீதும் எதிரிகள் வட்டாரம் மட்டுமின்றி, நாம் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் வட்டாரத்தில் இருந்தும் கூடப் பல விமர்சனப் பாணங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இதே விமர்சகர்கள் கடந்த காலத்தில் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களின் பாணங்களை எங்கே வைத்திருந்தார்கள்? ஏன் அப்போது இதேபோலக் கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை? இப்போது மட்டும் இந்த அரசு மீது பாய்வது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
1993 துரோக வரலாறு மீண்டும் திரும்புகிறது:
தன் மீது சொந்தக் கூட்டணியிலேயே வைக்கப்படும் விமர்சனங்களால் காயமடைந்துள்ள வைகோ, தனது 32 ஆண்டு கால அரசியல் தியாகங்களை நினைவு கூர்ந்து உருகினார். கடந்த ஒரு வார காலமாக, நான் எந்தக் கூட்டணியில் இருக்கிறேனோ, அதே கூட்டணியைச் சேர்ந்த சிலர் என் மீது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களையும், அபாண்டமான பழிகளையும் கற்பனையாகப் புனைந்து பேசி வருகிறார்கள்.
உயிரைக் கொடுக்கத் துணிந்தவன்:
கடந்த 1993-ஆம் ஆண்டு (திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது) என் மீது எப்படிப்பட்ட அபாண்டமான பழிகள் சுமத்தப்பட்டதோ, அதே போன்றதொரு சூழல் இப்போது நடக்கிறது. 32 ஆண்டுகளுக்கு முன்பு எந்தக் கட்சிக்காக என் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்தேனோ, எத்தனையோ தியாகங்களைச் செய்தேனோ, இரவும் பகலும் என் குடும்பத்தைப் பார்க்காமல் உழைத்தேனோ, அங்கிருந்தே எனக்குப் பழிகள் வந்தன.
இதையும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
எதையும் தாங்கும் இதயம்:
பேரறிஞர் அண்ணா சொன்னது போல ‘எதையும் தாங்கும் இதயம்’ எனக்கு உண்டு. இந்த வைகோ எத்தனையோ விஷ அம்புகளைத் தாங்கியவன். ஆயிரமாயிரம் கணைகளை என் மீது வீசினாலும், மக்கள் நலனுக்காகவும் திராவிட இயக்கத்தை உயர்த்துவதற்காகவும் என் இறுதி மூச்சு வரை உழைப்பேன் என்று உணர்ச்சி ததும்பப் பேசினார்.