ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் – நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்..
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டமும் நல்ல முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் நாட்களில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழக பட்ஜெட் சிறப்பாக தாக்கல் செய்யப்படும். இதனை 100 சதவீதம் அனைவரும் வரவேற்பார்கள் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18, 2026: தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை அனைவரும் வரவேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கியத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாகவும் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழ்நாடு பட்ஜெட்:
இந்த நிலையில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 16 நாட்களாக முதலமைச்சர் விஜய் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டமும் நல்ல முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் நாட்களில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் தமிழக பட்ஜெட் சிறப்பாக தாக்கல் செய்யப்படும். இதனை 100 சதவீதம் அனைவரும் வரவேற்பார்கள்.
கடந்த 55 நாட்களாக அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மக்கள் வரவேற்கும்போது, நீங்களும் வரவேற்று மகிழ்ச்சியாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசுகிறார்:
மேலும், “இன்னும் ஆறு மாதங்களில் எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் தேர்தல் வரும்” என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது குறித்தும் அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாகவும், அவருக்கு இன்னும் கள யதார்த்தம் புரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவினருக்கும் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.