மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!
நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய பாஜக அரசு.
சென்னை, பிப்ரவரி 07: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து வரும் 12 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி மத்திய அலுவலகங்கள் முன்பு பிப்ரவரி 13ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இரு பெரும் அரசியல் கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மேலும் படிக்க: பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு…தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு:
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக மத்தியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நிதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை:
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் – வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை – வளர்ச்சித் திட்டமும் இல்லை என மத்திய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அடிமை அதிமுக.
விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறி:
நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய பாஜக அரசு. அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
துரோகம் செய்து வரும் அதிமுக:
ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக. நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புது புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் மத்திய பாஜக வை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அடிமை அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து மாநகரங்களிலும் தலா ஒரு இடத்திலும் மற்ற இடங்களில் கழக நகர-மத்திய-பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும் படிக்க: தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்:
திமுகவினர் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசையும் – ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.