“ஊழல் ஃபைல்கள் எங்கே?”.. 10 மணிக்கே சட்டமன்றம் போய்விட்டேன்.. முதல்வர் வாயே திறக்கல.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்!!
Udhayanidhi Slams CM Vijay: சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் ஊழல் ஃபைல்களைப் பற்றி சட்டமன்றத்தில் வாயே திறக்கவில்லை எனச் சாடியுள்ளார். மேலும், திமுக மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைக்க முடியும் என்றும், தற்போதைய அமைச்சர்கள் பட்டப்பெயர்களால் மட்டுமே பிரபலமாகி வருகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 25: சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். முன்னதாக ஆளுங்கட்சி தரப்பில் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கோப்புகள் தனது மேஜையில் இருப்பதாக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியிருந்தார். அதன்பின்னர், அது குறித்து சட்டப்பேரவையில் எவ்விதப் பேச்சும் எழாததைச் சுட்டிக்காட்டி அவர் இந்த அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிக்க: “பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது!”.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
காலை 10 மணிக்கே சட்டமன்றத்திற்கு சென்றேன்:
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தனது சொந்தக் குடும்பத் திருமண நிகழ்வைக்கூட விரைவாக முடித்துவிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். “முதலமைச்சருக்குக் கொஞ்சமாவது சூடு, சுரணை இருக்கும் என்று நினைத்துக்கொண்டுதான் காலை 10 மணிக்கே சட்டமன்றத்திற்குச் சென்றேன். ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்ட ஊழல் ஃபைல்களைப் பற்றி முதலமைச்சர் ஏதேனும் பேசுவார் அல்லது அவற்றை ஓபன் செய்து காட்டுவார் என்று பார்த்தால், அவர் ஒரு வார்த்தை கூட வாயையே திறக்கவில்லை” என்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை மேற்கோள்காட்டி உதயநிதி சாடினார்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது:
தொடர்ந்து பேசுகையில், திமுக மீது ஆளுங்கட்சியினரால் பொய்க் குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்த முடியும் என்றும், ஆதாரப்பூர்வமாக எதையும் நிரூபிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். “எங்கள் கட்சியின் மீதோ அல்லது எங்கள் தலைவர் மீதோ எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் நிரூபிக்க இயலாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் தான் எதையாவது சொல்லி பூச்சாண்டி காட்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று அவர் விமர்சித்தார்.
இதையும் படிக்க: ‘வெற்றி பயணம்’.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
பட்டப்பெயர்களால் அறியப்படும் அமைச்சர்:
அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலானோரை மக்களுக்குப் பெயரளவில் தெரியவில்லை என்றும், அவர்கள் பட்டப்பெயர்களால்தான் அறியப்படுகிறார்கள் என்றும் கூறினார். “இன்றைய அமைச்சரவையில் உள்ள 2, 3 அமைச்சர்களைத் தவிர மற்ற யாராவது மக்களின் நினைவில் இருக்கிறார்களா? அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் பட்டப்பெயர்களை வைத்துதான் அழைக்கிறார்கள். பிளாக் லாட்டரி டிக்கெட் விற்கும் அமைச்சர், முறுக்கு அமைச்சர், திருட்டு விசிடி வைக்கும் அமைச்சர், உருட்டுக் கட்டை அமைச்சர், சங்கி அமைச்சர், பவுடர் அமைச்சர், பாத்ரூம் அமைச்சர் எனப் பட்டப்பெயர்களால்தான் இவர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள்” என அந்த கூட்டத்தில் அவர் கலகலக்க பேசினார்.